அதிகாலையில் 'பகீர்'.. மின்னல் வேகத்தில் வந்த கார்.. 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி, பலர் படுகாயம்
சென்னை: வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை பாடி தாதங்குப்பம் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் மாவட்ட நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனுக்கு வண்ணம் தீட்டும் பணியில் 8 மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு முதலீடுகள்.. சிக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்?
அவர்களுக்கு முன்பாக பெயிண்ட் வேலைக்காகச் சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிய டாடா ஏஸ் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது.
அதிகாலையில் விபத்து
அதிகாலை 3 மணியளவில் ஒப்பந்த பணியாளர்கள் டாடா ஏஸ் வாகனம் முன்பாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரெட்டேரி பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கி அதிவேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனம் மீது மோதியது. கார் அதிவேகத்தில் வந்து மோதியதால் டாடா ஏஸ் வாகனம் முன்பக்கம் சென்று, அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது மோதியது.
படுகாயம்
இச்சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளுடன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்களை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சசிகலா (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல படுகாயமடைந்த செஞ்சியை சேர்ந்த காமாட்சி (25) என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சிகிச்சை
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த பெண்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த மலர், அம்சவள்ளி மற்றும் ஆவடியைச் சேர்ந்த ராதா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை தவிர இந்த விபத்தில் மூர்த்தி, சத்யா, முருகேசன், கவுதம் ஆகியோரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
19 வயது
இந்த விபத்தில் சொகுசு காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில் காரை ஓட்டி வந்த பெரம்பூரை சேர்ந்த சுஜித் (19) காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பின், சுஜித்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்படி ஏற்பட்டது
போலீசார் விசாரணையில் சுஜி தனது நண்பர்களோடு ஈசிஆர் செல்லும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த சாலை விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது.