மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து.. எல்லாமே தனியாருக்கு! தமிழக அரசுக்கும் தரணும் -மா.சுப்ரமணியன்
சென்னை: மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தற்போது 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும், தடுப்பூசிகள் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 96 சதவீதமும், 2ம் கட்டமாக 92 சதவீதமும் பூஸ்டர் தடுப்பூசி 60 சதவீதமும் போடப்பட்டு உள்ளது என்றார்.
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா உட்பட பல உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளிடம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
இந்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2 வாரங்களாக ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உருமாறும் கொரோனா
மத்திய அரசின் சுகாதார துறை செயலாளர் சுற்றிக்கை அனுப்பினார். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முழு மரபணு பரிசோதனை கூடம் தமிழகத்தில் இருப்பதால் ஒமிக்கிரான் கண்காணிப்பு இருந்து வருகிறது. உருமாற்றம் 10க்கும் மேலாக உள்ளது. பல வகையான உருமாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

BF7 கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தினமும் 10க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் XBB வகை கொரோனாதான் உறுதியாகி வருகிறது. உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் BA5 கொரோனாவின் உள் வகையான பாதிப்பும் BF7 வகை கொரோனா தான் சீனாவில் பாதிப்புகள் அதிமகாக காரணமாக உள்ளது. முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது.

படுக்கை வசதிகள்
வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு, படுக்கை வசதி, மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் வசதிகளை அவர் ஆய்வு செய்தார். தமிழகத்தில் ஒன்றேகால் லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக 72 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. 3 மாத மருந்து கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரேட்டர் போதுமான அளவில் உள்ளன. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் 2% பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது.

ரேண்டம் பரிசோதனை
தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 பன்னாட்டு முனையங்களில் ரேண்டாம் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை பன்னாட்டு முனையத்தில் கோலாலம்பூர், துபாய், கொழும்பு, தோகா, தாக்கா ஆகிய விமான நிலையங்களில் இருந்து வந்த பயணிகளில் 2 சதவீதம் என்ற அடிப்படையில் 37 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

மரபணு பரிசோதனை
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் தட்பவெப்ப நிலை கண்காணிக்கப்படுகிறது. இதில் அதிக தட்பவெப்பம் இருந்தால் தனிமைப்படுத்தி ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் 72 ஆயிரம் படுக்கைகள் கொரோனாவுக்காக தயார் நிலையில் உள்ளன. புனே, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பும் நிலை மாறி சென்னையில் அந்த வசதி உள்ளது.

மூக்கு வழியாக செல்லும் தடுப்பூசி
தற்போது 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மேலும் தடுப்பூசிகள் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி யாருக்கும் போடுவதில்லை. மூக்கு வழியாக போடும் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்குதான். அரசு மருத்துவமனைகளுக்கு இல்லை. அந்த தடுப்பூசி தந்தால் போடும் பணியை தொடங்கப்படும்.

92% தடுப்பூசி
மூக்கு வழியாக போடும் தடுப்பூசியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம். தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக நடத்தி முதல் கட்டம் 96 சதவீதமும், 2ம் கட்டம் 92 சதவீதமும் போடப்பட்டு உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி 60 சதவீதம் போடப்பட்டு உள்ளது. ஒமைக்கிரானில் 10 வகையான பாதிப்புகள் உள்ளன." என்றார்.












Click it and Unblock the Notifications