புதுச்சேரியில் 3 பாஜகவினர் எம்எல்ஏ-க்களாக நியமிக்கப்பட்டது செல்லும்- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை; புதுச்சேரியில் மத்திய அரசால் 3 பாஜகவினர் நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 7-ந் தேதி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி.
இதன் பின்னர் சில நாட்களிலேயே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மே 10-ந் தேதி கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதல்வர் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டார்.
புதுச்சேரி: பாஜகவுக்கு 2 அமைச்சர்கள் மட்டும்தான்.. அதுக்கு மேல எதுவும் கிடைக்காது. ரங்கசாமி கறார்!
3 பேர் நியமன எம்.எல்.ஏக்கள்
இந்நிலையில்தான் மத்திய அரசு திடீரென புதுச்சேரிக்கான 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது. 3 நியமன எம்.எல்.ஏக்களான வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகியோர் பாஜகவை சேர்ந்தவர்கள். இது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹைகோர்ட்டில் வழக்கு
இதனையடுத்து இந்த எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி புதுவை கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அதாவது முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதியதாக அமைச்சரவை, எம்.எல்.ஏக்கள் பதவியேற்கவில்லை. அப்படியான நிலையில் 3 நியமன எம்.எல்.ஏக்களை அவசரமாக நியமித்தது ஏன்? அதுவும் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளது ஏன்? என்று அந்த வழக்கில் கேட்கப்பட்டிருந்தது.
சட்டவிரோதம் என வாதம்
மேலும் நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்படுவோர் பொருளாதாரம், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளாக இருக்க வேண்டும் என்பது மரபு. இதை மீறி பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதற்காகவே 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்; ஆகையால் 3 பேரின் நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஜெகநாதன் தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
செல்லும் என தீர்ப்பு
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏ-க்கள் நியமனம் செல்லும் என்றும் நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தனர்.