"கோர்ட் உத்தரவை மதிக்காத.. அதிகாரிகளுக்கு ஜெயில் தான்!" அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் தொடர்பாகச் சென்னை நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறியதாகக் கூறி தெய்வசிகாமணி என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தெய்வசிகாமணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, பணிப்பயன் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று 2013ம் ஆண்டு உத்தரவிட்டது.

வழக்கு
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பதவி உயர்வுக்கான பட்டியலில் தெய்வசிகாமணி பெயரைப் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால உத்தரவுப்படி பதவி உயர்வுக்குத் தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என தெய்வசிகாமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறை தண்டனை
அப்போது நீதிபதிகள், விதிமீறல் கட்டடங்கள் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கையை எதிர்த்து அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுக்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்குகளில், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைச் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டினர். நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் செயலுக்கு அபராதம் விதிப்பது 2ஆம் பட்சமாகத் தான் இருக்க வேண்டும் எனவும், சிறைத் தண்டனை விதித்தது தான் பிரதானம் என்றும் எச்சரித்துள்ளனர்.

பணி இடைநீக்கம்
இதுபோன்ற அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுவரை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேல்முறையீடு விண்ணப்பங்கள்
அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஐஏஎஸ் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் மட்டத்தில் இருந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். அரசிடம் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பதவியில் நியமிக்கப்படும் அதிகாரிகள், லஞ்சப் பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என்று நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரவு
இந்த பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சேர்த்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு தொடர்பான விசாரணையை அவர்கள் வரும் ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications