இருக்குற வேலையைப் பாருங்க.. அப்புறம் 'பஞ்சாயத்து' பேசிக்கலாம் - 'குட்டு' வைத்த ஐகோர்ட்
சென்னை: தங்களுக்கு எதிராக முன்னர் கூறப்பட்ட கருத்துக்கள் ஊடகங்களால் பரபரப்பை ஏற்படுத்தியதாக மத்திய மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்த நிலையில், இந்த விவகாரங்கள் பிரேத பரிசோதனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், இப்போது மாநிலத்தில் நிலவும் COVID-19 தொற்று நடவடிக்கைகளில் கவனம் இருக்கட்டும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவர், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்த விசாரணையில், கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இந்த கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தலாம் என்றும் கருத்து தெரிவித்தது.

ஐகோர்ட்டில் விளக்கம்
இந்த நிலையில், மே2 ம் தேதி சட்டமன்றத் தேர்தலின் வாக்குகளை எண்ணும் போது கோவிட் -19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி சென்னை உயர்நீதிமன்றத்திடம் விளக்கினார்.

மீடியாவை கட்டுப்படுத்துங்க
அப்போது அவர், வாக்கு எண்ணிக்கையின் போது ஊடகங்களுக்கு சில வழிமுறைகளை நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால், மீடியாக்களின் ரிப்போர்ட்டிங் முறையாக கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பு வழங்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் வாதிட்டது. அதேபோல், நீதிமன்றத்தின் வாய்வழி கருத்துக்கள் குறித்த ஊடகத்தின் செய்திகள், ஆணைக்குழு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடினமான பணி
அதுமட்டுமின்றி, எந்த செய்தியையும் பரபரப்பாக்க வேண்டாம் என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது கடினமான பணியாகும் என்றும், நீதிமன்றத்தின் வாய்வழி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட பின்னர் சிலர் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதுபோன்ற எந்தவொரு விஷயத்தையும் கையாள்வதற்கு "நீதிமன்றங்கள் உள்ளன" என்று கோர்ட் தேர்தல் ஆணையத்துக்கு உறுதியளித்தது.

இப்போதைய தேவை என்ன?
பிறகு, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எவ்வாறு எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். இறுதியில், கருத்து தெரிவித்த நீதிபதிகள், "இப்போது இவை அனைத்தையும் விட்டுவிடுவோம். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை நாங்கள் உணரவில்லை. மீடியாக்களால் உங்கள் பெயர் கெட்டது போன்ற விஷயங்களின் போஸ்ட் மார்ட்டமை பிறகு பார்த்துக் கொள்ளலாம். நாம் இப்போ என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம்" என்று வழக்கை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications