அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான ஓபிஎஸ் கோஷ்டி வழக்கு- ஹைகோர்ட்டில் நாளை விசாரணை!
அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை நாளை ஹைகோர்ட்டில் நடைபெற உள்ளது.
சென்னை: அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் கோஷ்டி தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினார். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் பெஞ்ச், இபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பின் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனோஜ் பாண்டியன் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தற்போது விசாரணை நடத்தினார்.
பொதுக்குழு தீர்மானங்கள் இயற்கைக்கு எதிரானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களை எதிர்த்து பிப்ரவரி 23-ந் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் வாதிட்டார். மேலும், அதிமுக விதிகள்படி உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை. உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைதான் எடுக்க முடியும். ஆனால் ஜூலை 11 பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் போட்டு ஓபிஎஸ் அணியினரை நீக்கி உள்ளனர். ஆகையால் அதிமுக உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கருத்தை கேட்காமல் தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனோஜ்பாண்டியன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டார். இதனடிப்படையில் இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், மனோஜ் பாண்டியன் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்; ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் நடைமுறைக்கு வந்து 8 மாதங்களாகிவிட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications