ஷாக்! தீண்டாமை அதிகம் உள்ள மாவட்டங்களில் மதுரை முதலிடம்! 445 கிராமங்களில் இன்னும் இந்த கொடுமையா?
சென்னை : தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் கடைப்பிடிக்கப்படும் முதல் 10 மாவட்டங்கள் பட்டியலில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளதோடு, தமிழ்நாடு முழுவதும் 445 தீண்டாமை கிராமங்களில் தென் மாவட்டங்களில் மட்டும் 137 கிராமங்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கார்த்திக், தமிழ்நாட்டில் நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையில் ADGP சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கபடும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை மொத்தம் 445 என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தீண்டாமை கொடுமை
இதில் அதிகபட்சமாக முதல் இடத்தில் மதுரை மாவட்டம் 43, இரண்டாம் இடத்தில் விழுப்புரம் 25, அதற்கு அடுத்தடுத்த இடத்தில் திருநெல்வேலி 24, வேலூர் 19, திருவண்ணாமலை 18 என்கிற வரிசையில் இடங்களை பிடித்துள்ளன. இந்தாண்டு(2022), கடைசி இடத்தில் ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை இடம் பெற்றுள்ளது. மற்றொரு பக்கம் தீண்டாமை வன்கொடுமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்கள் என்று 341 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

தீண்டாமை கிராமங்கள்
மேற்கண்ட பட்டியல் வரிசையில் தீண்டாமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் இக்கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 2021ல் மொத்தம் 597 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 6வது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் டாப்-1ல் உள்ள மதுரை மாவட்டத்தில் வெகு குறைவாக வெறும் 21 விழிப்புணர்வு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

மதுரை முதலிடம்
அதே போல் இந்தாண்டு 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு ஏற்படுத்திய விழிப்புணர்வு கூட்டங்கள் மொத்தம் 212, அதில் தீண்டாமை வன்கொடுமைகள் டாப்-1 வரிசையில் உள்ள மாவட்டமான மதுரையில் நடத்திய கூட்டங்கள் வெறும் 3 மட்டுமே, இதே காலகட்டத்தில் 6வது இடத்தில் திருச்சி மாவட்டத்தில் 28 இடங்கள் நடைப்பெற்றுன. அதாவது மதுரையைவிட கூடுதலாக 25 கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும் தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம்(0) என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அதிகரிக்கும் வழக்குகள்
தேசிய குற்ற ஆவண காப்பகம்(NCRB) அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமை குற்ற வழக்குகள் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2018 வரையிலான 10 ஆண்டுகளில் 27.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை எச்சரித்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதிய தீண்டாமை கிராமங்களை கண்டறிந்து அங்கு இரு தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படாத நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications