காங்கிரஸில் அடுத்த விக்கெட் காலி... கட்சி தாவுகிறாரா அப்சரா ரெட்டி... காரணம் என்ன..?
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்பு விலகியுள்ள நிலையில் மேலும் ஒருவர் அங்கிருந்து விலகும் முடிவில் உள்ளார்.
மகிளா காங்கிரஸ் தேசியச்செயலாளராக உள்ள அப்சரா ரெட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதற்கு காரணம் எந்த கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழகிரி அழைப்பு விடுப்பதில்லை என்றும் குறைந்தபட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற தகவலை கூட அழகிரி அளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை... தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் - குஷ்பு
கட்சி நிகழ்ச்சிகள்
அண்மையில் மறைந்த வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற போது அது குறித்த தகவலை தேசிய செய்தித் தொடர்பாளரான தனக்கு தெரியப்படுத்தவில்லை என ட்விட்டரில் ஆதங்கம் தெரிவித்திருந்தார் குஷ்பு. இப்போதும் அதேபோன்று ஆதங்கக்குரல்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அழைப்பில்லை
கடந்த 11-ம் தேதி திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான கண்டன மாநாட்டிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் அப்சரா ரெட்டியை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது;
தகவல் இல்லை
''நான் ராகுல்காந்தியை நம்பி காங்கிரஸில் இணைந்தேன். நான் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளராக எனது பணிகளை இந்திய அளவில் செய்து வருகிறேன். பல மாநிலங்களில் இருந்தும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்ற தகவலை கூட தெரியப்படுத்துவதில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.''
குறை சொல்லமாட்டேன்
''இதற்கு முன் திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது கட்சி சார்பான நிகழ்ச்சிகள் பற்றி குறுஞ்செய்தி மூலமோ, அலைபேசி மூலமோ சத்தியமூர்த்தி பவன் ஊழியர்கள் முன் கூட்டியே தெரிவிப்பார்கள். இப்போது அந்த வழக்கம் கடைபிடிக்கப்படுவதில்லை. இங்கிருக்கும் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் காங்கிரஸில் உள்ள அனைவரையும் குறை சொல்லமாட்டேன்'' என்று கூறினார்.
இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அப்சரா ரெட்டி அதிருப்தியில் இருப்பதை உணர முடிகிறது. குஷ்புவை போல் இவரும் கட்சி தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.