அமெரிக்காவில் கமலை சீண்டிய அண்ணாமலை.. இப்படியே பேசுனா ‘ஆடு’ மேய்க்கத்தான் போகணும்.. கொதித்த மநீம!
சென்னை : ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து தற்போது ஆளைக் கடிக்க முனைகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலை அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் காட்டமாக விமர்சித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு ஒரு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றி விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதனால், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் கொதித்தெழுந்து அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்ணாமலை
ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் நடத்தும், 'இண்டர்நேஷனல் லீடர் பெல்லோஷிப்' என்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சென்றார். பயிற்சி முடிந்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை பங்கேற்று வருகிறார். அப்போது இந்திய, தமிழக அரசியல் பற்றியும் அண்ணாமலை பேசி வருகிறார். கலிபோர்னியாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கமல்ஹாசனையும் விமர்சித்துள்ளார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து
இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சை மக்கள் நீதி மய்யம் கண்டித்துள்ளது. இதுதொடர்பாக மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று ஒதுக்கித் தள்ளலாம் என்று பார்த்தால் அவர் பேசியது நம்மவர் கமல்ஹாசன் பற்றி. ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரை கடித்துக்குதற முனைந்திருக்கிறார்.

நாமக்கல்லுக்கும் கரூருக்கும் மத்தியில்
கமல்ஹாசன் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களை படிக்க லாஸ்ஏஞ்சல்ஸ் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாக புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களை சந்தித்ததை கேலி செய்தும் பேசியுள்ளார். கமல்ஹாசனின் லாஸ்ஏஞ்சல்ஸ் பயணத்தைப் பற்றி இவர் கலிபோர்னியாவிலிருந்து பேசுகிறார். கலிபோர்னியா எங்கே இருக்கிறது. நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது? அதே அமெரிக்கவில் போய் அரசியல் பேசும் இவர் கமல்ஹாசனை கேலி செய்கிறார்.

கமல் சொன்ன உண்மை
தன் சம்பாத்தியத்திற்கு ஒரு தொழிலை வைத்துக்கொண்டு மக்களுக்காக பாடுபடும் கமல்ஹாசனை, அரசியலில் சம்பாதிப்பவர்கள் கேலி பேசுவது புதிதல்ல. எனவே அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்பட காட்சி ஒன்றின் நேர்காணலில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கமல் ஒரு வரலாற்று உண்மையை கூறினார். அதுவும் காஞ்சிப் பெரியவர் சொன்ன உண்மையை, சோ ஒப்புக்கொண்ட உண்மையை, அண்மையில், இவரது கட்சியிலிருக்கும் சுப்பிரமணியசாமி வழிமொழிந்த உண்மையைத்தான் கமல் கூறினார்.

ஆடு மேய்க்கத்தான் போக வேண்டும்
அதையெல்லாம் மறுக்க திராணியற்ற அண்ணாமலை, கமல்ஹாசன் மீது பாய்கிறார். இப்படி அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும். ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனை குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவல் அதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications