பாதாள சாக்கடையில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்த விவகாரம்.. சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கழிவுகளை அகற்ற பாதாள சாக்கடையில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கழிவுநீர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, கைகளால் மலம் அள்ளுவதற்கு தடை விதித்தும், உலர் கழிவறைகளின் கட்டுமானத்திற்கு தடை விதித்தும் 1993ம் ஆண்டு மத்திய அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, 2013ம் ஆண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மறுவாழ்வு சட்டமும் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் 1971ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை பெருநகரம் உள்பட 15 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என சேர்த்து தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதாக சொல்லப்படுகிறது.

விஷவாயு
25 ஆண்டுகளுக்கு முன்னதாகச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும், பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியை மனிதர்களை செய்யும் பணி இன்றும் நடக்கிறது. இதனால் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது மற்றும் அவர்களது ஆயுட்காலம் சீராக குறைந்து வருவதும் தெரிகிறது.

144 பேர் பலி
கடந்த 20219ம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அன்றைய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, '2013 முதல் டிசம்பர் 2018 வரை நாடு முழுவதிலும் 323 துப்புரவு தொழிலாளர்கள் பலியாகி உள்ளதாக கூறினார். இதில் மிக அதிக அளவாக தமிழகத்தில் 144 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

துப்புரவுத் தொழிலாளர்கள்
இதனிடையே கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது; இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்; துப்புரவுத் தொழிலாளர்கள் நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தப்படுத்தும் பணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதாள சாக்கடை
இந்த சூழலில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்த உத்தரவை மீறி கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை வாளகத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கழிவு நீரை அகற்ற மனிதர்களை பாதாள சாக்கடையில் இறக்கி தூய்மை செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர்.
மேலும் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெற்று கைகளால் பாதாள சாக்கடையில் உள்ள சேற்றை வாளியை கொண்டு ஒருவர் அள்ள அதனை மற்றொருவர் சேகரித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ்
இந்த சம்பவம் தொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்ட மாநில மனித உரிமை ஆணையம் மனு தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications