தலைகீழாக மாறும் நிலவரம்.. சென்னையை தாண்டி பிற பகுதிகளில் கிடுகிடுவென உயரும் கொரோனா.. மாவட்ட லிஸ்ட்
சென்னை: இதுவரை சென்னையில் மட்டுமே, கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில், இன்றைய புள்ளிவிவரங்கள் வேறு ஒரு வகையான வரைபடத்தை வெளிக்காட்டுகின்றன.
ஆம்.. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2710 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்கள் முன்பு வரை, ஒட்டுமொத்த தமிழக பாதிப்பில் சுமார் 80% தலைநகர் சென்னையில் பதிவாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா நெகட்டிவ்.. விஜயபாஸ்கர் சொன்ன தகவல்
நிலைமை மாறிவிட்டதே
அதாவது 1500 பேருக்கு பாதிப்பு என்று புள்ளிவிவரம் வெளியானால், அதில் 1,200 பேருக்கு மேற்பட்டோர் சென்னையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இன்றைய புள்ளிவிவரத்தில் ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. இன்று சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1487 என்ற அளவில் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 50 விழுக்காடு அளவுக்கான கொரானா பாதிப்பு சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. கடந்த 3 நாட்களாகவே, சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலும், தினசரி, கொரோனா எண்ணிக்கை 1000த்தை தாண்டி வருகிறது.
பிற மாவட்டங்கள் பயணித்த சென்னை மக்கள்
இதற்கு முக்கியமான காரணம், கடந்த பல வாரங்களாக சென்னையில் இருந்து பாஸ் பெறாமல், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சென்னையில் இருந்து பலரும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியதுதான் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தபோது, மக்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தங்கள் சொந்த மாவட்டங்களை நோக்கி பயணித்தனர். அதில் பலருக்கும் பாஸ் கிடையாது. சில இடங்களில் காவல் துறையினர் பரிதாபப்பட்டு அவர்களை அனுப்பி வைத்த சம்பவங்களும் நடந்தன.
மதுரை இரண்டாவது இடம்
இன்றைய தினம் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே மிக அதிக அளவுக்குப் பாதிப்பு பதிவு செய்துள்ள, மாவட்டம் மதுரை. அங்கு 153 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 120, செங்கல்பட்டு மாவட்டத்தில் 126, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56, ராணிப்பேட் 52, தஞ்சாவூர் மற்றும் தேனி தலா 36, தூத்துக்குடி 57, திருச்சி 51, திருநெல்வேலி 5, விழுப்புரம் 40, இவ்வாறு பரவலாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
குடும்பத்திற்கு ஆபத்து
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், இ பாஸ் பெறாமல் அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தராமல் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வது, தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மக்கள் உணரவேண்டும். பரிசோதனை மேற்கொள்ளாமல் எந்த ஊரில் இருந்தும் கிளம்ப வேண்டாம்.
திருவண்ணாமலை எல்லையில் பரிசோதனை
ஒருவேளை பரிசோதனை செய்யாமல், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருவதாக இருந்தால், மாவட்ட எல்லையிலேயே, பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு முறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதன் மூலமாகதான் கொரோனா பரவலை குறைக்க முடியும். இவ்வாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் தேவை மருத்துவர்கள்
வரும் நாட்களில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் மருத்துவப் பணியாளர்களை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பணியமர்த்த வேண்டும். சென்னைக்கு மட்டும் தனி கவனம் செலுத்தியது இனி வேலைக்கு ஆகாது. பிற மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் படுக்கை வசதியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். புதிதாக யாராவது வந்தால் அவர்களை கண்காணித்து தனிமைப்படுத்தி உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு சுகாதாரத் துறை காவல் துறை உள்ளிட்டவை இணைந்து கைகோர்க்க வேண்டும். குறிப்பாக, தென் மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று, பல மருத்துவ வல்லுநர்கள், தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.