அதிமுக வேட்பாளர் பட்டியல்.. பல மாஜி அமைச்சர்களுக்கு மீண்டும் சான்ஸ்.. புதுமுகங்கள் குறைவு
சென்னை: வரும் சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன் கரணமாக அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்கல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்த முறை தேர்தலைச் சந்திக்கிறது, ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆறு பேரை கொண்ட கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது.
வலுவான வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில், தற்போது மீதமுள்ள 171 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திமுக பல்வேறு கட்சிகளைக் கொண்ட வலுவான ஒரு அணியைக் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவும் மிகவும் வலுவான, மக்கள் மத்தியிலும் கட்சியிலும் அதிக செல்வாக்கு உடையவர்களையே வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளது.
மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை
தற்போது அமைச்சர்களாக உள்ள மூன்று பேருக்கு இம்முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய மூவருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர்கள்
அதேநேரம் பல முன்னால் அமைச்சர்களுக்கும் இந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் பிவி ரமணா, கோகுல இந்திரா, சி. வளர்மதி, மாதவரம் மூர்த்தி, சின்னய்யா, வி. சோமசுந்தரம். கே. பி. முனுசாமி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே ராமலிங்கம், ஏ.கே. செல்வராஜ், எம்.எஸ்.எம் ஆனந்தன், செ தாமோதரன், நத்தம் விஸ்வநாதன், கு.ப. கிருஷ்ணன், பரஞ்சோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கும் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 17 அமைச்சர்கள்
சி. வளர்மதி ஆலந்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க.செல்வத்திடம் தோல்வியடைந்திருந்தார். அதேபோல கோகுல இந்திராவுக்கு அண்ணாநகர் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்த இவர், 2016ஆம் ஆண்டில் மே.கே. மோகனிடம் அவர் தோல்வியடைந்திருந்தார். இதேபோல மொத்தம் 17 முன்னாள் அமைச்சர்களுக்குத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு குறைவு
முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, அமைச்சரவை மாற்றம் என்பது அடிக்கடி நிகழும். ஊழல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டிற்கு ஆளாகும் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். அதேபோல ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளர் பட்டியலில் பல புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இந்த முறை திமுக அணிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக புதுமுகங்களுக்கு குறைவாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது,