ஒரே நாளில் காலியாகும் கூடாரம்.. மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தங்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
இந்தாண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாகக் களமிறங்கியது. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொண்டது.
ஸ்டாலின் கேபினட்.. இளைஞர் + சீனியர்.. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்விக்கு சரியான அமைச்சர்கள் சாய்ஸ்
இத்தேர்தலுக்காகக் கமல் 234 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் செய்தார். சமக சார்பில் சரத் மற்றும் ராதிகா தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர்.
மக்கள் நீதி மய்யம் தோல்வி
இருப்பினும், மக்கள் நீதி மய்யம் கூட்டணி இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்பட்ட மகேந்திரன், சி.கே.குமரவேல், பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு என அனைவரும் தோல்வியடைந்தனர். குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல் பாஜக மகளிர் அணி தலைவரி வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.
தோல்விக்கு என்ன காரணம்
கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்றும் கமல் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அக்கட்சியின் துணைத் தலைவர் பொன் ராஜ், சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதுதான் அதன் தோல்விக்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கூண்டோடு ராஜினாமா
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல மு்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் அக்கட்சியிலிருந்தே முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். மற்றொரு துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவியும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் அறிக்கை
முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நேர்தல் முடிவுகள், கட்சி கட்டமைப்பினை வலுப்படுத்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
விரைவில் நடவடிக்கை
அப்போது கலந்துகொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதை கட்சியின் தலைவரே முடிவு செய்யட்டும் எனத் தெரியப்படுத்தினர். இது குறித்து கட்சித் தலைவர் கமல் விரைவில் பரிசீலனை செய்வார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கூட்டோடு ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.