புயலால் கொந்தளிக்கும் மெரினா கடல்.. வார்னிங்கை காற்றில் பறக்கவிட்டு.. கூலாக செல்ஃபி எடுக்கும் மக்கள்
சென்னை: வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள மாண்டோஸ் புயலின் தாக்கத்தால் எப்போதும் அழகாக காட்சியளிக்கும் மெரினா கடல் இன்று அச்சமூட்டும் வகையில் பயங்கரமாக ஆர்ப்பரித்து வருகிறது.
மெரினாவின் இந்த கொந்தளிப்பால் உஷாரான போலீஸார், கடலுக்கு அருகே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகிறார்கள்.
ஆனால், போலீஸாரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யும் பொதுமக்கள், கொந்தளிக்கும் கடல் முன்பு நின்று செல்ஃபி எடுத்து வருகிறார்கள்.

நெருங்கும் 'மாண்டோஸ்'
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. மாண்டோஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல், சென்னைக்கு தென்கிழக்கில் 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது மணிக்கு 8 கி.மீ. என்ற வேகத்தில் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அச்சமூட்டும் கடல்கள்
இதனிடையே, தற்போது புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் உள்ள கடல்கள் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. நேரம் செல்ல செல்ல, காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடல் அலைகளும் உயரமாக எழுந்து வருகிறது. சென்னை எண்ணூர் முதல் கிழக்குக் கடற்கரை சாலை வரை உள்ள கடல்களை இப்போது பார்ப்பதற்கே பயமாக உள்ளது. அந்த அளவுக்கு கடல் சீற்றம் இருக்கிறது.

ஆர்ப்பரிக்கும் "கறுப்பு" மெரினா
அந்த வகையில், எப்போதும் நீல நிறத்தில் ரம்மியமாக காணப்படும் மெரினா கடல் இப்போது கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் கறுப்பாக மாறியுள்ளது. அத்துடன், அதிக கொந்தளிப்புடன் காணப்படும் மெரினாவில் 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் இன்று மதியம் முதலாகவே மெரினாவில் கூடியிருந்த மக்களை அங்கிருந்து போலீஸார் அப்புறுத்தப்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும், கடலுக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் மக்களை போலீஸார் எச்சரித்து வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் செல்பி
எனினும், போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் பலர் கடலுக்கு அருகே சென்று விளையாடுவதும், கடல் அலை அதிக உயரத்தில் வரும் போது அதற்கு முன்பாக நின்று செல்பி எடுத்துக் கொள்வதுமாக சேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினா கடற்பகுதி எவ்வளவு அழகானதோ அதே அளவுக்கு ஆபத்தான கடலும் ஆகும். மெரினா கடலில் சுழல் ஏற்படும் பகுதிகள் அதிகம். அதேபோல், கடலில் கால் வைக்கும் போது மண்ணாக இருக்கும் பூமி, அடுத்த சில அடிகளிலேயே ஆழமாக இருக்கும். எனவே, ஆபத்தை உணராமல் பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications