அண்ணாமலையின் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.. கொலுபொம்மை விழாவா நடந்தது? கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
சென்னை : தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது என மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய தமிழகமுதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு விலக்கு, கச்சத் தீவு மீட்பு, தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினார்.
பிரதமர் மோடியை மேடையில் வைத்தே தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியதை திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெகுவாகப் பாராட்டியதோடு சமூக வலைத்தளங்களில் பலத்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

அண்ணாமலை கண்டனம்
அதே நேரத்தில் மேடையில் பிரதமரை வைத்துக் கொண்டே இவ்வாறு பேசுவது ஏற்புடையது அல்ல எனவும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வரின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது பாஜக நிகழ்ச்சிக்காக அல்ல. பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் அரசியல் செய்துள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் பேச்சினை மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் கடமை
தமிழ் நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். மாறாக மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல. தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது வாய்ஜாலம் காட்டும் பிரதமர், சம உரிமைக்கான கோரிக்கை பற்றியும் கூட எதுவும் பேசவில்லை.

அரைவேக்காட்டுத் தனத்தை காட்டுகிறது
அண்ணாமலைக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை உண்டா? முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஆனால், அதை மறைத்து - தமிழக மக்களின் முக்கியமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்த முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications