ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை.. சரியான முடிவு.. ஆனால் விசிக பேரணியை அனுமதியுங்கள்.. சிபிஎம் கோரிக்கை
சென்னை: காந்தி ஜெயந்தியான அக்.2ம் தேதியன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றிருந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், விசிக சார்பில் அதே தேதியில் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டும் என தமிழ்நாடு காவல்துறை ஆர்எஸ்எஸ் மற்றும் விசிக என இரண்டு தரப்பினரின் பேரணிக்கும் தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் பேரணி செல்வதில் என்ன தவறு? 'எப்பவுமே அமைதியா தான் நடக்கும்’ - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
எதிர்ப்பு
தென்னிந்தியாவில் ஆர்எஸ்எஸ் தனது ஆதரவை அதிகரிக்க தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தியான அக்.2ம் தேதியன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில் பேரணி நடத்த உயர்நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றமும் அனுமதி வழங்கியதையடுத்து, பேரணிக்கான தயாரிப்பு பணிகளை அமைப்பு தீவிரப்படுத்தியது. இதற்கிடையில், இந்த பேரணிக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தோழமை கட்சிகளின் பேரணி
விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அக்.2ம் தேதி பேரணி நடத்துவதாக அறிவித்தன. இந்த பேரணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்பதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதேபோல திராவிடர் கழகமும் இதில் பங்கேற்பதாக அறிவித்தது. மேலும் சில அமைப்புகளும் கட்சிகளும் இந்த பேரணியில் பங்கேற்பதாக அறிவித்தன.
அனுமதி மறுப்பு
ஏற்கெனவே தமிழ்நாட்டில் என்ஐஏ ரெய்டு, பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் கைது, அதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு என தொடர்ந்து பரபரப்பான சம்பவங்கள் நடந்த நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஒரு சில மாவட்டங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், விசிக சார்பில் நடத்தப்படும் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கருத்து
இந்த அறிவிப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "அரசியல் கட்சி அல்லது இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்குவது அந்தந்த காவல் நிலையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஏனெனில் அந்த ஊரில் என்ன நிலைமை இருக்கிறது என்பது அந்த காவல்நிலையத்திற்குதான் தெரியும். இவ்வாறு இருக்கையில் நீதிமன்றம் RSSக்கு 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கியிருப்பது சரியானது அல்ல.
வரவேற்கத்தக்கது
மட்டுமல்லாது RSS ஒரு பயங்கரவாத அமைப்பு என அனைவருக்கும் தெரியும். நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் இவர்கள் மீதான குண்டு வெடிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. குண்டு வெடிப்பு நடத்துவதற்கு RSS எப்படி பயிற்சி கொடுக்கிறது என சமீபத்தில் ஷிண்டே என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்திருந்தார். இவர்கள் காந்தியை கொன்றவர்கள். இப்படி இருக்கையில் காந்தி ஜெயந்தி அன்று அவர்களுக்கு எப்படி அனுமதி கொடுக்க முடியும்? எனவே தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
தமிழ்நாட்டில் மதவெறி நடவடிக்கையை கட்டுப்படுத்த இந்த உத்தரவு உதவும். அதே வேளையில், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கிற, மதவெறியை எதிர்க்கிற, ஜனநாயக இயக்கங்களின் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.