மாசி சங்கடஹர சதுர்த்தி: புது தாலிக்கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் செல்வம்,செல்வாக்கு கிடைக்கும். எல்லா துன்பங்களும் நீங்கும்
சென்னை: திருமணமான பெண்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் புது தாலிக்கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும். சங்கடம் போக்கும் விநாயகரை வணங்க ஏற்ற நாள் சங்கடஹர சதுர்த்தி பிப்ரவரி 20ஆம் தேதி வருகிறது. மாசிக்கயிறு பாசியேறும் வரை நிலைக்கும்', 'மாசிக்கயிறு பாசி படியும்' என்னும் பழமொழிகள் வழக்கில் உண்டு எனவேதான் மாசி மாதத்தில் புது தாலிக்கயிறு மாற்ற வேண்டும் என்று சொல்கின்றனர் முன்னோர்கள்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தியாகும்.
மோடிக்கு குழந்தை பிறக்கட்டும்.. கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.. - லாலு பிரசாத் யாதவ் பகீர்!
சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம்.
புதுமனைப் புகுவிழா
மாசி மாதம் மந்திர உபதேசம் பெற, உபநயனம் செய்ய, கலைகளில் தேர்ச்சி பெற, புதிய கலைகளைக் கற்க இம்மாதம் சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில் புதுமனைப் புகுவிழாவினை மேற்கொண்டால் அந்த வீட்டில் நிறைய நாட்கள் சந்தோசமாக இருப்பர். அவர்களின் வசந்தம் வீசும். திருமணமானப் பெண்கள் இம்மாதத்தில் தாலிக் கயிற்றினை மாற்றிக் கொள்கின்றனர்.
மாசியில் புது தாலிக்கயிறு
இம்மாதத்தில் சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இம்மாதத்தில் திருமணம் நடத்தப் பெற்ற தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த திருமண வாழ்வினைப் பெறுவர். இதனை 'மாசிக்கயிறு பாசி படியும்' என்ற பழமொழி மூலம் உணரலாம். இந்த ஆண்டு வரும் 20ஆம் தேதி சங்கடஹர சதுர்த்தி வருவதால் மாலை நேரத்தில் 2.36 மணிக்கு மேல் 04.30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.
மாசி தேய்பிறை சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில் காலையிலிருந்து விரதம் இருந்து மகா கணபதியை மனதில் நினைத்து பூஜிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் விநாயகர் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு தனிமையில் உறங்க வேண்டும்.
விரதம் இருந்தால் பலன்கள்
மாசியில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபட எல்லா தோசங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம். சங்கடஹர சதுர்த்தி விரதத்தினை தொடங்குபவர்கள் மாசி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ, ஆவணி சங்கடஹர சதுர்த்தியிலிருந்தோ ஆரம்பித்து கடைப்பிடித்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறலாம். இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
சனிதோஷம் விலகும்
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியினால் ஏற்படும் குறையும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.