’அது’ இருந்தா தான் சரக்கு கிடைக்கும்! குடிகாரர்களுக்கான திடீர் அறிவிப்பு! மறுபடியும் முதலில் இருந்தா?
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
டாஸ்மாக் மதுபானங்கள் மீண்டும் விலை உயர்வு..? காரணம் என்ன? - உத்தரவால் குடிமகன்கள் கடும் அதிர்ச்சி..!
அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்றும் தமிழகத்தில் 5வது நாளாக கொரோனா பாதிப்பு 1000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. அதன்படி நேற்று மட்டும் ஒரேநாளில் மொத்தம் 1,461 அதிகரித்ததோடு, முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளை தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. அதன்படி "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறை
இதன் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் கூட்டமாக நிற்க வைக்க கூடாது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனைவரையும் வரிசையில் நிற்க வைக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
மாஸ்க் கட்டாயம்
மேலும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், சூப்பர்வைசர்கள் , விற்பனையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசத்தை சரியான முறையில் அணிந்திருக்க வேண்டும். மேலும் தங்கள் கைகளை அடிக்கடி கிருமிநாசினி , சோப் உள்ளிட்டவற்றால் சுத்தம் செய்ய வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட மேலாளர்கள் ஊழியர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.