எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. டாப் 10இல் 9 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள் தான்
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் நிர்வாக ஒதுக்கீட்டில் டாப் 10இல் 9 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 4349 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2650 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 6999 எம்பிபிஎஸ் இடங்களும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வு ஜன. 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதற்கான தரவரிசை பட்டியலைச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
மாணவர்கள்
இந்த அரசு ஒதுக்கீடு கலந்தாய்வுக்காக மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த 16,309 பேரும் சிபிஎஸ்இ பாடத்திட்டப் படித்த 8,654 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மாநில பாடத் திட்டத்தில் படித்த 16,029 பேரும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 8,453 பேரும் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர், இதில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என மூன்றுக்கும் தனித்தனியாகத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல்
அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நாமக்கல் மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 710 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் 23ஆவது இடத்தையும், தமிழ்நாட்டில் முதலிடத்தையும் பிடித்தவர். அதைத் தொடர்ந்து நாமக்கல்லை சேர்ந்த எம்.பிரவீண், சென்னை அண்ணாநகர் எஸ்.கே.பிரசன் ஜித்தன் ஆகியோரும் 710 மதிப்பெண்களை எடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்,
டாப் 9இல் சிபிஎஸ்இ மாணவர்கள்
பொதுவாக நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்குக் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனால் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும் ஏழை மாணவர்கள் கல்லூரியில் சேர தயக்கம் காட்டுவார்கள். இதனால் தான் அரசு ஒதுக்கீடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டில் டாப் 10 இடங்களைப் பெற்றவர்களில் 9 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ஆகும். 10ஆவது இடத்தை பிடித்த மாணவர் மட்டுமே மாநில பாடத் திட்டத்தில் படித்தவர் ஆவர்.
நிர்வாக ஒதுக்கீடு
அதேபோல நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் திருப்பூரின் ஆர்.ஆர்.கவினேஷ் 710 மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான் (701 மதிப்பெண்கள்), வேலூரைச் சேர்ந்த ஷெர்லி சுஷன் மேத்யூ (700 மதிப்பெண்கள்) அடுத்தடுத்து இடங்களைப் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள்
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காகத் தனியாகத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஐ. சிவா என்பவர் 514 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரின் எஸ்.பிரகாஷ்ராஜ் (512 மதிப்பெண்கள்), தருமபுரி சி.சந்தானம் (483 மதிப்பெண்கள்) அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்
கலந்தாய்வு தேதிகள்
சிறப்புப் பிரிவினர் மற்றும் 7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் வரும் ஜன 27 முதல் ஜன.29 வரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜன. 30 முதல் பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் வழியாகக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ச தரவரிசை பட்டியலை www.tnmedicalselection.net, www.tnhealth.tn.go.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தரவரிசையைத் தெரிந்து கொள்ளலாம்.