மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கொரோனா உறுதி - வீட்டில் தனிமை
மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை: மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வைகோ தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்
தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. தினசரியும் 28 ஆயிரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில், 94.8 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும், 5.2 சதவீதம் பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை, 2.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த வைகோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் , வைகோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக மதிமுகவினர் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், பின்னர் அது அதிகரித்து சளி தொல்லை அதிகமானதாகவும் தெரிவித்தனர். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வைகோ உடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக உடன் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்கள் நேரில் அண்ணா அறிவாலயம் சென்று பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்குத் தேவையான இடங்களைக் கேட்டுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.