சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு.. பா.ரஞ்சித் மீது சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 30 ஆண்டுகால நல்லாட்சியை திட்டமிட்டு மறைத்து உள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித் என்று அதிமுக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் 22ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது சார்பட்டா பரம்பரை திரைப்படம்.
1970-களில் சென்னையில் இருந்த குத்துச்சண்டை வாழ்வியலை , அப்படியே கண் முன்னால் எடுத்து வரும் அளவுக்கு இந்த திரைப்படத்தில் உழைப்பு கொட்டப்பட்டு இருக்கிறது.

இந்திரா காந்திக்கு எம்ஜிஆர் ஆதரவு
குத்துச்சண்டை மற்றும் அது தொடர்பான காட்சிகள் மட்டும் இல்லாமல், திரைப்படத்தில் வரும் பசுபதி கதாபாத்திரம் திமுககாரராக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எமர்ஜென்சி காலகட்டம் காட்டப்பட்டிருக்கிறது, மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரம் அவசர நிலையை கொண்டு வந்த இந்திரா காந்திக்கு எம்ஜிஆர் ஆதரவாக இருந்தது போன்ற காட்சி அமைப்பு படத்தில் இடம்பெற்றிருக்கிறது. சுவரில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரில் எம்ஜிஆர், இந்திரா காந்திக்கு ஆதரவளிப்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது படத்தின் ஒரு காட்சியில் வந்து செல்கிறது.

ஜெயக்குமார் கருத்து
திமுகவினர் இந்த திரைப்படத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவதை பார்க்கமுடிகிறது. அதேநேரம் இதுவரை அதிமுக தரப்பில் இருந்து எந்த ஒரு கருத்தும் வெளிவராமல் இருந்தது. முதல் முறையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று இதுபற்றி தனது கருத்தை அறிக்கை மூலம், பதிவு செய்திருக்கிறார் . ஜெயக்குமார் கூறியதாவது: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுகால நல்லாட்சியை திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

திமுகவின் பிரச்சார படம்
சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பு இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே எடுக்கப்பட்டுள்ளது . திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாய் கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவரது படங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்துக்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர்.

முகமது அலிக்கு மீன் குழம்பு பரிமாறிய எம்ஜிஆர்
மான் கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராக வெளிப்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சூர் பாக்சர் சங்கத்திற்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டையில் பங்கேற்பதற்காக நாக்அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவுக்கு குத்துச்சண்டை மீது காதல் கொண்டிருந்தார் பொன்மனச்செம்மல் எம்ஜி ஆர்.

எம்ஜிஆர் செய்த உதவிகள்
திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகளை வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்காக, அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால், சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும், எம்ஜிஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திமுகவை விமர்சனம் செய்தவர் ரஞ்சித்
கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம். ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக் கிழித்த ரஞ்சித் என்னும் ஈட்டி.. இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? அதிகார மையம் இடத்தில் அடைக்கலமாக, எதிர்க்கட்சியினர் மீது புழுதிவாரித் தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்துகொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல.

படத்திற்கு கண்டனம்
எம்ஜிஆர் அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்று வரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற எண்ணற்றவர்களுக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது . எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை சார்பட்டா பரம்பரை படத்தில் தவறாக சித்தரித்து உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் பிரச்சார பீரங்கி மட்டுமல்லாது, குத்துச்சண்டை விளையாட்டில் பயிற்சி பெற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications