மன சஞ்சலத்தை தீர்க்க 'மனம் திட்டம்'.. சுகாதாரத்துறையின் சூப்பர் முயற்சி! முழு விவரம் இதோ!
சென்னை: கல்லூரி மாணவர்கள் மன சஞ்சலத்தால் விபரீத முடிவுகள் எடுப்பதை தடுக்கும் பொருட்டு மனம் திட்டம் என்ற பெயரில் புதிய முயற்சியை நடைமுறைப்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை.
முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பிறகு படிப்படியாக பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மனம் திட்டம் என்றால் என்ன, இதனால் யாருக்கு என்ன பயன் என்பதை இங்கே பார்க்கலாம்.
உரிமையா கேட்ட ஸ்டாலின்.. பார்த்ததுமே கலங்கிய திப்பம்பட்டி ஆறுச்சாமி.. ’முடிஞ்ச்’ பாஜக திட்டம் பனால்!
மன நலம்
பொதுவாக மனிதர்கள் உடல்நலத்தை பேணுவதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், மனநலத்தை பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்று சொல்லலாம். உடலும் மனமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமான ஆக்கப்பூர்வமான வாழ்வை நாம் வாழ முடியும். கல்லூரி மாணவர்களை பொருத்தவரை கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள்.
சந்திக்கும் சவால்கள்
பெரும்பாலானவர்கள் அச்சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை, அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், கூடுதலான நற்பலன்களை தரும்.
மனநல மன்றங்கள்
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் துவங்கப்பட்டு 'மனநல நல்லாதரவு மன்றங்கள்' (Mind Health Support Forum) அமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ அடிப்படையில்
இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், மற்றும் அனைத்து வருட மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்திட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மனநல நல்லாதரவு மன்றங்களின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மனநலம் பேணும் வகையிலும் மனநல மேம்பாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
உளவியல் ஆலோசனை
உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இத்திட்டம் முதல் கட்டமாக மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். மனநல பிரச்சனைகள் வராமல் தடுப்பதும் மாணவர்களின் மனநல மேம்பாட்டினை உறுதி செய்து நிறைவான மாணவ பருவத்தை வாழ்ந்திட மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.