அமைச்சர் மா.சு சொன்னதற்கு மாறாக பேசிய அன்பில் மகேஷ் “முதல்வர் சொல்றதை கேட்போம்” துறைகளுக்குள் பூசலா?
சென்னை : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகள் திறப்புக்கு பிறகு மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதற்கு மாறாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று பேசியிருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்களுக்குள்
தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை அல்லாமல் வேறு துறை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லி சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. சில நேரங்களில் இரு துறைகளும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும், இரண்டு துறைகளின் அமைச்சர்களும் மாறுபட்ட வகையில் பேசிவிடுவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்த கருத்துக்கு முரண்பட்ட வகையில் இன்று பேசியுள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

அமைச்சர் நேரு
சமீபத்தில் கூட, தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரப் போகிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு பற்றி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லையா? கட்டணங்கள் உயர்த்தப்படவில்லையா? சூழ்நிலைக்கேற்ப விலைவாசி உயர்கிறது. மக்களை பாதிக்காத வகையில் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.

சிக்கல்
அமைச்சர் நேருவின் பேச்சை கெட்டியாக பிடித்துக்கொண்ட அ.தி.மு.க, பாஜகவினர், ஆட்சிக்கு முன்பு ஒருமாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு திட்டமிட்டு வருகிறது என தொடர்ந்து குற்றம்சாட்டினர். இது சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளிக்க வேண்டி வந்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகள் திறப்புக்கு பிறகு மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. முதல்வர் அலுவலகம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதற்கு மாறாக இவர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பங்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பேசிய விஷயத்தை அறியாமல் ஒன்றும் அன்பில் மகேஷ் இப்படி பேசியிருக்க மாட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளிகளில் மாஸ்க் பற்றி முடிவெடுப்பதாக இருந்தால் பள்ளிக் கல்வித்துறையினரிடமும் ஆலோசித்திருக்க வேண்டும். அவராகவே பிரஸ் மீட்டில் பேசியிருக்கிறார். அதனால் அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றே அன்பில் மகேஷ் இன்று இப்படி பேசியிருக்கிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications