திமுக கொலைகள், ஓசி பிரியாணிக்கு பாக்ஸிங்,துப்பாக்கி தொழிற்சாலை-பட்டியல் போட்டு சாடிய சி.வி.சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவகாருண்யம் மற்றும் நேர்மையை திமுக தலைவர் ஸ்டாலின் போதிக்க வேண்டியது திமுகவினருக்குத்தான் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்ட அறிக்கை: உலகப்பேரழிவான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசியல் மாட்சியங்களை கடந்து உலகமே ஓரணியில் நின்று போராடிவரும் நிலையில், நானும் இருக்கிறேன், அரசியலில் நாளும் ஒரு அவதூறு அறிக்கை விடுக்கிறேன் என்பதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். குற்றம் குறைகளை கூறுவதற்கு இட்டுக்கட்டிய பொய்களை சேர்த்துக்கொண்டு நித்தம் ஒரு குற்றத்தை சுமத்துகிறார். கடுகளவையும், மலையளவாய் கடினத்தோடு திரிக்கிறார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவதூறுகளை அன்றாடம் விதைக்கிறார். அந்த வரிசையில், நேற்று, தமிழக காவல்துறை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது. கொங்கு தமிழ் பேசும் கோவை பூமியில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழவிட்டு, 1965 மொழிப் போராட்டத்திற்கு பிறகு ராணுவம் வந்து கலவரத்தை அடக்கியதும், அக்கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சோகம் நடைபெற்றதும் திமுக ஆட்சியில் தான்.

சைக்கோ கொலைகள்

சைக்கோ கொலைகள்

சிவகங்கையில், திமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நகர்மன்ற தலைவர் முருகன் என்பவர் திமுக கட்சி பிரமுகரால் கார் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் திமுக ஆட்சியில் தான் நடந்தது. சரம் சரமாய் நடத்தப்பட்ட ஆதாயக் குற்றங்களும், சைக்கோ கொலைகளும், குறிப்பாக வாரிசு இல்லாத முதியோர்களின் சொத்துக்களை குறிவைத்து ஏராளமாய் நிகழ்ந்த, நடத்தப்பட்ட படுகொலைகளும் திமுக ஆட்சியில் தாராளமாய் நடந்தது. இதற்கு ஒரு பதச்சோற்று சான்று, சென்னை அசோக் நகரில் முன்னாள் டாமின் சேர்மேன் சரவணன், அவரது மனைவி மற்றும் வேலைக்கார பெண் மூவரும் சொத்துக்காக படுகொலை செய்யப்பட்டதாகும்.

குடும்ப அரசியலுக்கு பலி பீடம்

குடும்ப அரசியலுக்கு பலி பீடம்

அதுபோலவே திமுக தலைமையின் குடும்ப அரசியலுக்கு பலிபீடம் ஏற்றப்பட்ட தா. கிருட்டிணன் மரணம், அரசியல் போட்டியில் நடத்தப்பட்ட லீலாவதி படுகொலை, சிவகங்கை மாவட்டம், தேவகோடையில் நடந்த ரூசோ கொலை என்றெல்லாம் திமுக ஆட்சி காலத்தின் சட்டம் ஒழுங்குச் சீரழிவை பட்டியலிட தொடங்கினால் அதற்கு பக்கங்கள் போதாது, போதாது. இவ்வளவு ஏன் சட்டம் ஒழுங்கை சீரழித்த குற்றத்திற்காக மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே ஆட்சியும், திமுக ஆட்சிதான் என்பதும் வரலாறு. இப்போது கூட தமிழகத்தில் எங்கேனும் ஒன்றாக நடைபெறும் முகம் சுளிக்க வைக்கும் குற்ற சம்பவங்களின் பின்னணிகள் அனைத்திலும் திமுவினர்தான் முன்னணியில் இருக்கிறார்கள்.

இதயவர்மன் துப்பாக்கிதொழிற்சாலை

இதயவர்மன் துப்பாக்கிதொழிற்சாலை

இதற்கு காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், பொதுமக்கள் மீது நடத்திய கொலைவெறி துப்பாக்கி சூடும், அவர் வைத்திருந்த கள்ள துப்பாக்கிகளும், தோட்டாக்களும், தோட்டாக்கள் தயாரிப்பதற்கென்றே அவர் தொழிற்சாலை நடத்தியதும், வெட்கி தலைகுனிய வேண்டிய காரியங்கள். இதை கண்டிக்க திராணி இல்லாதவர்தான் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதுபோலவே செங்கல்பட்டு அருகே இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு காரணமான திமுக இளைஞரணி பிரமுகர் தேவேந்திரன், வேலைக்கார சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்று சில மாதங்களுக்கு முன்பு சிறைக்கு சென்ற திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் போன்றோர், குற்றவாளிகளின் நாற்றங்காலாக திமுக திகழ்கிறது என்பதற்கு சமீபத்திய சாட்சிகள்.

ஓசி பிரியாணிக்கு பாக்ஸிங்

ஓசி பிரியாணிக்கு பாக்ஸிங்

இது மட்டுமல்லாமல் ஓசி பிரியாணிக்கு பாக்ஸிங் போடுவது, பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை அடித்து உதைப்பது, கடப்பா கல்லைக் களவாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, நாங்கள் தான் நாளைக்கு ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று நடக்க சாத்தியம் இல்லாத கற்பனையில் மிதக்கும் திமுகவினர் இப்போதே கொலை, கொள்ளை, அடிதடி என்றெல்லாம் ஒத்திகைகளை தொடங்கி இருப்பதை, மக்கள் உற்று கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள், தக்க பாடம் கற்பிப்பார்கள். கடந்த திமுக ஆட்சியில் அப்பாவி மக்களை மிரட்டி நிகழ்த்தப்பட்ட நிலம் அபகரிப்புக்கு, ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, நில அபகரிப்பு தடுப்பு சட்டமும், நில அபகரிப்பு சட்ட பிரிவும், இந்தியாவிலேயே முதன் முதலாக ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சியாக நில அபகரிப்புகளில் ஈடுபட்ட பெரும்பான்மை திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் வரலாற்றின் உண்மை.

நில அபகரிப்பு உச்சம்

நில அபகரிப்பு உச்சம்

சுமார் 12,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையும்,உலகம் ஒருபோதும் மறவாது. இதை ஸ்டாலினும் நிராகரிக்க முடியாது. சட்டம் ஒழுங்கை என்றும் பேணிக்காப்பதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத இயக்கம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். தவறு இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு தயங்காத ஆட்சி ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி, இதனை மக்கள் நன்கு அறிவார்கள். திமுக தலைவரது குடும்பம், தென்மாவட்டங்களில் கனிமவளங்களை கொள்ளை அடிக்கிறது என்று ஆதாரங்களோடு செய்தி வெளியிட்ட அன்றைய தினபூமி நாளிதழின் ஆசிரியர் மணிமாறனையும், அவரது மகனையும், ஏனென்று கேட்டதற்காக அண்டை வீட்டுக்காரர் கருப்பையாவையும் கை விலங்கு பூட்டி சிறையில் அடைத்த ஆட்சி கடந்த கால திமுக ஆட்சிதான்.

உமா மகேஸ்வரி படுகொலை

உமா மகேஸ்வரி படுகொலை

திமுகவின் நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியையும், அவரது கணவர் மற்றும் வேலைக்கார பெண் உட்பட மூவரையும் படுகொலை செய்த நிகழ்வில், அக்குற்றத்தை செய்தது திமுகவை சேர்ந்த மகளிரணி பிரமுகர் சீனியம்மாளும், அவரது மகனும் தான் என காவல்துறையால் கண்டறியப்பட்டது. இதேபோல தமிழகத்தில் பல பகுதிகளில் திமுகவினர் உட்கட்சி அரசியல் பகையை முன்வைத்து ஆடிவரும் ருத்ரதாண்டவங்களை அடக்க முடியாத ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் ஜெயலலிதாவின் அரசை குற்றம் சொல்ல உரிமை கிடையாது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். திமுக கிளைக் கழக செயலாளர் மற்றும் திருநின்றவூர், கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், பரமகுரு என்பவர் 14.7.2020 அன்று, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். மக்கள் பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ததில், கொசவன்பாளையம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு அவரது கட்சி உறுப்பினர்களால், கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.

ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி அறிக்கை

ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி அறிக்கை

இதுகூட தெரியாத ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி கொண்டு அரசு மீது குற்றம் சுமத்த பெரிதும் முயற்சிக்கிறார். அவரது முயற்சி கானல் நீராகும். "தாயைபோல் பிள்ளை தலைமையை போல் தொண்டன் என்பார்கள்". எனவே ஜீவகாருண்யத்தையும், நேர்மையையும், திமுக தலைவர் ஸ்டாலின் போதிக்க வேண்டியது அவரது கட்சியினருக்குத்தான். சாதி, மத மோதல்கள் இல்லாத பூமியாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, குற்றங்களை தடுப்பதிலும், குற்றங்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை தண்டிப்பதிலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என பிரபல இந்தியா டுடே குழுமத்தால் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு விருது

தமிழகத்துக்கு விருது

அதுபோலவே மத்திய அரசு அறிவித்த விருதுகளில் மூன்றில் ஒரு பங்கை வென்று சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதையும், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்ததற்காக விருது பெற்றதையும் நாடறியும். அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில், காவல் துறை சுயமாக, சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கும், இது வரலாறு. தமிழக காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு, குற்ற நிகழ்வுகளை குறைத்த பெருமை, ஜெயலலிதாவையே சாரும்.

அதிமுக அரசின் பணியிட மாற்றம்

அதிமுக அரசின் பணியிட மாற்றம்

அவர் வழியில் தற்போது நடைபெறும் ஆட்சியில் காவல்துறை மேலும் சிறப்புடன் பூரணமாக சுதந்திரமாக அரசியல் தலையீடுகள் இல்லாமல், அறத்தின் வழியி ல், நெஞ்சுரத்தின் நெறியில், தமிழக காவல்துறை செயல்பட்டு வருவதையும், அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் இரவு பகல் பாராது தம்மை மெய்வருத்தி தமிழக காவல் துறை ஆற்றி வரும் தொண்டுகளையும், மக்கள் அறிவார்கள். காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் விடுத்து இருக்கும் அறிக்கை தமிழக காவல்துறைக்கு மனச்சோர்வை மட்டுமே தரும். அண்மையில் காவல்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்களில் ஆளும் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களின் தலையீடுகள் ஏதும் நிகழவில்லை எனவும், இதனால் ஆளும் கட்சியில் அதிருப்தி நிலவுவதாகவும் திமுக ஆதரவான தினசரி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

ஸ்டாலினுக்கு தேவை பக்குவ அரசியல்

ஸ்டாலினுக்கு தேவை பக்குவ அரசியல்

இச்செய்தி வெளியிடே ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது என்பதை மக்களுக்கு புரியவைக்கும். நித்தம், நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை அறிக்கையாக வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களின் மனதில் நஞ்சை புகுத்த முயற்சிக்கும் மு.க. ஸ்டாலின், அவரது தரம்தாழ்ந்த செயலை ஒதுக்கி வைத்து விட்டு தொற்றுநோய் காலத்தில் பக்குவத்தோடு அரசியல் நடத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+