வேளாண் சட்டம்: துரைமுருகன் வைத்த செக்.. ஓபிஎஸ் பற்றி சீண்டல்! வேறு வழியின்றி வெளிநடப்பு செய்த அதிமுக
சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை அதிமுக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வியால் செக் வைத்தபிறகு அதிமுக வெளிநடப்பு செய்து உள்ளது.
மத்தியில் இந்த சட்டங்களுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான, ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்பி ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு எதிரான தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தால் மகன் ஆதரவு, தந்தை எதிர்ப்பு என தலைப்பு செய்தி வரும் என்பதால் ஓபிஎஸ் வெளிநடப்பு செய்கிறார் என்று துரைமுருகன் கிண்டல் செய்தார்.
இந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் அனைத்தும் வேண்டிய சட்டசபை கூட்டத்தில் தான் நடந்தன.

ஸ்டாலின் தீர்மானம்
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக தனி தீர்மானத்தை சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக இந்த சட்டங்கள் இருப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.

பாஜக வெளிநடப்பு
தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதும் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் நான்கு பேரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டனர். விவசாயிகளுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்று நிருபர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

ஓபிஎஸ் பேச்சு
இருப்பினும், பாஜக கூட்டணி கட்சியான அதிமுக உடனே வெளிநடப்பு செய்யவில்லை. அக்கட்சி சார்பில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிர எதிர்த்து தீர்மானம் போடுவது சரி கிடையாது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கலாம் என்று பரிந்துரை செய்தார்.

துரைமுருகன் செக்
அப்போதுதான் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா, இல்லையா என்று அதிமுகவினரை பார்த்து துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் முடிவை எடுத்தது. இதன் மூலம் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் அதிமுக ஆதரவளிப்பதாக பதிவாகிவிட்டது.

துரைமுருகன் கிண்டல்
அப்படியும் விடவில்லை துரைமுருகன். மத்தியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபோது, லோக்சபா எம்பியாக இருக்கும் ரவீந்திரநாத் அதை ஆதரித்து வாக்களித்தார். எனவே, இப்போது அந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றும்போது அதிமுக அதை ஆதரித்தால் மகன் ஆதரவு, தந்தை எதிர்ப்பு என தலைப்பு செய்தி வரும் என்பதால் ஓபிஎஸ் வெளிநடப்பு செய்கிறார் என்று கிண்டலாக தெரிவித்தார் துரைமுருகன்.
அதாவது விவசாயிகளுக்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று அதிமுக கருதினாலும் கூட, லோக்சபாவில் ரவீந்திரநாத் அந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், வேறு வழியில்லாமல் இப்போது அதிமுக வெளிநடப்பு செய்யும் நிலைமைக்கு வந்து விட்டது என்பதுதான் துரைமுருகன் கருத்தாக இருந்தது. துரைமுருகன் குறுக்கீடு செய்யாமல் இருந்தால் ஒருவேளை அதிமுக அவையில் இருந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் குறுக்கே புகுந்து கேள்வி எழுப்பியதால், அதிமுக வெளிநடப்பு செய்து விட்டது. விவசாயிகள் சட்டத்திற்கு அதிமுக ஆதரவாக இருக்கிறது என்று பொதுவெளியில் திமுக பிரச்சாரம் செய்வதற்கு இந்த வெளிநடப்பு ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்த படக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications