மே 15 முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் ரூ 2000.. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்!
சென்னை: மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கோப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குதல் ஆகும்.
தேர்தல் வாக்குறுதியில் ரூ 4000 அறிவித்துள்ள நிலையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரேஷன் அட்டை
இன்று முதல் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு வீடு தேடி ரூ 2000த்தை பெறுவதற்கான டோக்கனை நியாய விலை கடை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படுகிறது.

காலை முதல் நண்பகல் வரை
இந்த டோக்கன் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும். இந்த நிலையில் வரும் மே 15 முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மே 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொக்கையின் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்!
— I.Periyasamy.MLA., (@IPeriyasamymla) May 10, 2021
கூட்டுறவுத் துறை
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் வரும் 15 ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணத் தொகை ரூ 2000 வழங்கப்படும். இந்த பணியை கூட்டுறவுத் துறை சிறப்பாக செய்து முடிக்க திட்டமிட்டுள்ளது.

ரூ 2000 நிவாரணம்
ரேஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் ரூ 2000 கொரோனா நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த தொகை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் ஐ பெரியசாமி. இந்த திட்டத்தால் 2.07 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications