அனுமதியின்றி பாஜக வேல் யாத்திரை நடத்தினால்... சட்டம் தன் கடமையை செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அனுமதியின்றி பாஜக வேல் யாத்திரை நடத்தினால் சட்டம் தன் கடமையை செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் இதனைக் கூறினார்.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை மிக வலிமையாக எந்தவித விரிசலுமின்றி இருப்பதாகவும், கூட்டணி வேறு; கொள்கை வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தான் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றும் திமுகவை மக்கள் தலைதூக்க விடமாட்டார்கள் எனவும் சாடினார்.
பனிமலையோ... பாலைவனமோ... வீரர்களுடன் தான் என் தீபாவளி... நெகிழ வைத்த பிரதமர் மோடி..!
மேலும், வரும் தேர்தலில் நரகாசுரர்களை அழிக்கும் இயக்கமாக அண்ணா திமுக விளங்கும் என ஜெயக்குமார் குறிப்பிட்டார். திமுகவை பொறுத்தவரை கட்டபஞ்சாயத்து மற்றும் அடாவடியின் மொத்த உருவமாக திகழ்வதாக விமர்சித்தார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை அரசு அலட்சியப்படுத்தவில்லை என்றும் விசாரணைக் குழுவின் முடிவில் உண்மைத்தன்மை தெரியவரும் எனவும் தெரிவித்திருக்கிறார். அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் தானே புகார் அளிக்கப்படுகிறது அப்படியிருக்கும் போது அந்த நம்பிக்கையை புறந்தள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கொரோனா காலத்தில் வேல் யாத்திரை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசின் கருத்து எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.