“அங்கதான் போறோம்.. நீங்களும் வாங்க..” பிரஸ்மீட்டில் கேட்ட செய்தியாளரை சட்டென அழைத்த அமைச்சர் நேரு!
சென்னை : ஓட்டேரி பகுதியில் மழைநீர் தேங்கியிருப்பதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, தண்ணீர் போய்க்கொண்டு தான் இருக்கிறது. நான் அங்கு தான் போகிறேன். நீங்களும் வந்தீர்கள் என்றால் போய் பார்த்துவிடலாம் என அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் கொட்டித் தீர்த்து வரும் மழையால், சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைக்கப்படாத இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை இன்று மாலைக்குள் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அவசர மீட்டிங்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மூலம், தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் மட்டுமே தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.

அமைச்சர் நேரு
இந்நிலையில் பருவமழை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அவசர ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர்.

சில பகுதிகளில் மட்டும் தான்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்துள்ளோம். 20.55 செ.மீ மழை சென்னையில் பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு மழை பெய்துள்ளது. சென்னையில் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது என கண்டறிந்து பணிகள் நடக்கிறது. திருவிக நகர், புளியந்தோப்பு, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் மட்டும் தான் மழைநீர் தேங்கியுள்ளது.

இன்று மாலைக்குள் முழுமையாக
இதற்கு அளவுக்கு அதிகமான மழையே காரணம். மழைநீர் தொடர்ந்து வடிந்து வருகிறது. 536 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 156 மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளன. 3 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. ரயில்வே துறையிடம் அனுமதி கேட்டு விரைந்து மழைநீர் வெளியேற்றப்படும். மழை நீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் மழைநீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நிவாரண உதவி
மழை பாதித்த பகுதிகளில் இல்லம் நோக்கி உணவு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 169 முகாம்கள் சென்னையில் தயாராக உள்ளன. சென்னையில் மழை காரணமாக பலியான 2 பேருக்கு இன்று மாலை நேரில் சந்தித்து நிவாரண காசோலை வழங்கப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 வார்டுகளிலும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

நீங்களும் வாங்க.. போய் பார்ப்போம்
பிரஸ் மீட்டின்போது செய்தியாளர் ஒருவர், மழைநீர் வடிகால் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்தும் ஓட்டேரி கால்வாய் பகுதியில் மழைநீர் தேங்கியிருக்கிறதே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, "ஓட்டேரி பகுதிகளில் கூடுதலாக மழை பெய்ததால் மழைநீர் வடிய தாமதமாகிறது. தூர்வாரியிருப்பதால் தண்ணீர் போய்க்கொண்டு தான் இருக்கிறது. நான் அங்குதான் போகிறேன். நீங்களும் வந்தீர்கள் என்றால் போய் பார்த்துவிடலாம்" என அழைத்தார்.












Click it and Unblock the Notifications