“ஸ்டாலின் ராசியில்லாதவர்னு சொன்னாங்க.. இன்று நிலைமைய பாருங்க.. அவ்வளவு ராசி” - கே.என்.நேரு கிண்டல்!
சென்னை : "முதல்வர் ஸ்டாலினை ராசி இல்லாதவர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இன்று சட்டசபைக்கு வர முடியாத அளவிற்கு அவர்கள் ராசிக்காரர்களாக உள்ளார்கள்" என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
மேலும், உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் முதல்வருக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூர் ரமணா நகரில், இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மிகப்பெரிய பொறுப்பு
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அனைவருமே தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகின்றனர். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சிறப்பு. 15வது கட்சி பொதுத் தேர்தலை கலைஞரைக் காட்டிலும் மிகச் சிறப்பாக நமது தலைவர் நம் முதலமைச்சர் நடத்தி முடித்திருக்கிறார். அனைத்து தோழர்களையும் அரவணைத்து இந்த கழகத் தேர்தலை முடித்து இரண்டாவது முறையாக அவர் தலைவராக வந்திருக்கிறார்.

எளிதான விஷயமல்ல
நிச்சயமாக அவர் இருக்கிற வரை அவர் தான் தலைவராக இருப்பார். அது தான் சரி. மீண்டும் பலமுறை தலைவராக வந்து தமிழ் மக்களுக்கு நல்ல வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கழகத்தை வழி நடத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கருணாநிதி 50 ஆண்டு காலம் திமுகவை வழிநடத்தினார். மு.க.ஸ்டாலின் பத்தாண்டு காலமாக கழகத்தை வழி நடத்தி வருகிறார். ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்துகிறார், மறு பக்கம் தமிழ்நாட்டு முதலமைச்சராக வழி நடத்துகிறார்.

7 வாக்குறுதிகள்
ஆட்சிக்கு வருவதற்கு முன் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை தந்துள்ளார். அதனை நோக்கி ஆட்சி நடத்துகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 34 சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் இருக்கிறார் ஆளுநர். சென்னை மாநகரம் தோன்றி 330 ஆண்டுக்கு மேல் ஆகிறது. ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மழைக்குள் ஒரு சிறப்பான மாநகரமாக திகழும். பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கித் தந்துள்ளார். பள்ளிக் கள்வித்துறைக்கு, மருத்துவத்திற்கு என பல துறைகளுக்கு அவர் வாக்குறுதி மட்டுமில்லாமல் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளார்.

அவ்வளவு ராசி
எங்களை கேடி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அதை ஒரு நல்ல மனிதர் சொன்னால் பரவாயில்லை. எங்கள் முதலமைச்சர் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் செயலில் செய்பவர். அவரை ராசி இல்லாதவர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இன்று சட்டசபைக்கு வர முடியாத அளவிற்கு ராசிக்காரர்களாக உள்ளார்கள். ஒன்றரை ஆண்டு காலம் சிறப்பாக பணியை நடத்திக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின்" என்று பேசினார்.

எடப்பாடி - அட்டாக்
தேர்தலுக்கு முன்பு, முதல்வர் சீட்டில் அமரும் ராசியில்லாதவர் ஸ்டாலின் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வந்தனர். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பினரும் சட்டசபைக்கே வரவில்லை. இதனைக் குறிப்பிட்டே அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications