’கல்லாப்பெட்டி சிங்காரம்’ எடப்பாடியை துளைத்தெடுக்கும் இரு ‘பன்னீர்’! லிஸ்ட் பெரிசாகிட்டே போகுதே!
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது திமுக அமைச்சரான எம் ஆர் கே பன்னீர் செல்வமும் தீவிரமாக விமர்சித்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்து, வெடித்து கிளம்பிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்த இருவரும், அவர்களது ஆதரவுவாளர்களும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருவதோடு களத்திலும் சரி சமூக வலைதளங்களிலும் சரி மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எவ்வளவோ பேசிப் பார்த்தும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக விட்டுக் கொடுக்காத ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என தான் பேசும் மேடைகள் தோறும் தாக்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் அவரது ஆதரவாளர்களும் தமிழகத்தில் எங்கு பேசினாலும் எடப்பாடி பன்னீர்செல்வத்தை பற்றி ஒரு வார்த்தையாவது விமர்சிக்காமல் இருப்பது இல்லை அந்த அளவுக்கு ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவு நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஓபிஎஸ்
இது ஒரு பக்கம் இருக்க டெல்லி ஆதரவு தனக்குத்தான் இருப்பதாக கூறிக் கொள்ளும் ஓபிஎஸ் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் புதிய நிர்வாகிகள் நியமனம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பது என அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருகிறார். குறிப்பாக சேலம் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை வளைக்க அவர் போட்டும் திட்டம் கை கொடுத்துள்ளதாகவும் விரைவில் சேலம் மாவட்டத்தில் பிரம்மாண்ட கூட்டம் இருக்கும் என்கின்றனர் தேனி ஆதரவாளர்கள்.

எம்ஆர்கே பன்னீர்செல்வம்
இப்படி ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கிறார் என்றால் திமுகவின் முக்கிய அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை வழக்கத்தை விட மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியை போலி விவசாயி என்றும் கல்லாப்பட்டி சிங்காரம் என கடுமையாக தாக்கி இருந்தார்.

அதிகரிக்கும் சிக்கல்
பொதுவாக திமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சிப்பது வழக்கம் தான் என்றாலும் நேற்றைய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் பேட்டியில் கடுகடுப்பு சற்று தூக்கலாகவே இருந்தது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் புறக்கணிக்கப்பட்டதாகவும் அப்போது விட்டுவிட்டு தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவது போல எடப்பாடி பழனிச்சாமி நடிப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார். ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் குடைச்சல் கொடுக்கிறார் என்றால் தற்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அரசியலில் குடைச்சல் கொடுப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் ஒரு சிக்கலாக பார்க்கப்படுகிறது என்கின்றனர் சேலம் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications