பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.! பளீச் என விளக்கிய அமைச்சர் பொன்முடி
சென்னை: திராவிடத்தால் கற்றோம் என்ற தலைப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்ணா, பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என அனைத்தும் செப்டம்பர் மாதம் தான் வருகிறது. இதனால் செப்டம்பர் என்றாலே திமுகவினருக்கு உற்சாகம் தான்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். திமுக சார்பில் இந்த ஆண்டும் மாநிலம் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் பொன்முடி
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடும் திமுக பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அதன்படி திமுக ஐடி விங் சார்பிலும் ட்விட்டர் ஸ்பேஸில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நடத்தப்பட்ட ட்விட்டர் ஸ்பேஸில், திராவிடத்தால் கற்றோம் என்ற தலைப்பில் துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விளக்கிப் பேசினார்.

வேந்தர்
அப்போது அதில் கலந்து கொண்ட ஒருவர், ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பது அவசியமா என்றும் ஆளுநராக ஏற்கனவே நியமன பதவியில் இருக்கும் ஒருவர், வேந்தராகவும் மற்றொரு பதவியில் இருக்க முடியுமா என்று கேட்டார். அதற்குப் பதில் அவர், "இதே கேள்வியைத் தான் நாங்கள் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். ஆனால், இதற்கான பதில் தான் கிடைக்கவில்லை. பல மாநிலங்களில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உட்பட பல மாநிலங்களில் ஆளுநர்கள் வேந்தர் பொறுப்பில் இருப்பதில்லை.

அதிகாரம் வேண்டும்
குஜராத். தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வேந்தர்களாக முதல்வர்களே உள்ளனர். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரமும் அவர்களுக்குத் தான் உள்ளது. இரு நாட்களுக்கு முன்பு கேரளாவிலும் இது குறித்துப் பேசி இருந்தனர். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தி, சட்டத்தை நிறைவேற்றி இருந்தனர்.

கல்வி
கல்வி என்பது மாநில பட்டியலில் இருக்க வேண்டும் அப்படி கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வந்துவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும். இதற்கான முயற்சிகளைத் திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். உயர்கல்வியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் பல நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20% இடங்களும், தனியார் கல்லூரிகளில் 10% இடங்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர்.

புதிய கல்லூரிகள்
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் உயர்கல்வி துறை மூலம் 20 கல்லூரிகளும் கூட்டுறவுத் துறை மூலம் மூலம் ஒரு கல்லூரி, அறநிலையத்துறை மூலம் 10 கல்லூரி என மொத்தம் 31 கல்லூரிகளைத் தொடங்கி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் எப்போதும் கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் என்றே குறிப்பிட்டு வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தால் கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் இலவசம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மாணவிகள்
அதேபோல மாணவிகளுக்கு மாதம்தோறும் 100 ரூபாய் கொடுக்கப்படும் எனக் கூறி உள்ளார். இது கிராமப்புற மாணவ மாணவிகளைப் பெரியளவில் ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காமராஜர் காலம் எப்படி ஆரம்பக் கல்விக்குப் பொற்காலமாக இருந்ததோ அதேபோல முதல்வர் ஸ்டாலின் காலம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைக்குப் பொற்காலமாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications