வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ அண்ணாமலை! மடியில் கனமில்லை வழியில் பயமில்லை! சேகர் பாபு அட்டாக்!
சென்னை : வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார், எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தான் தற்போது அனைத்து செய்திகளிலும் சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்து இருக்கிறது. அந்த வாட்சின் விலை கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
முதன்முறையாக இது குறித்து திமுக அமைச்சரான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில் அது தொடர்பாக பதில் அளித்த அண்ணாமலை இது ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. தேசியவாதி என்பதால் நான் இந்த கடிகாரத்தை அணிந்திருக்கிறேன் என்றார்.

ரபேல் வாட்ச்
ஆனால் அது எவ்வாறு வந்தது அந்த கடிகாரத்தின் பில் எங்கே என விடாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், திமுக மாணவரணி ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரும் அண்ணாமலை வாட்ச் விவகாரத்தை கையில் எடுத்திருக்கின்றனர். மேலும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பிலும் அண்ணாமலையின் கடிகாரம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் அது குறித்து பேசாத அவர் எனது பில்லை ஏப்ரல் மாதம் வெளியிடுகிறேன். அப்போது திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும். அவர்களின் சொத்து எவ்வளவு? பணம் எங்கெங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவிப்பேன் எனக் கூறியிருந்தார்.

அமைச்சர்கள் சொத்து
இது தொடர்பாக பேசியிருந்த அண்ணாமலை,"இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியில் உள்ள திமுக சாமான்ய மனிதனை பார்த்து பில் கேட்கிறார்கள். இந்த வாட்ச்க்கு பில் மட்டும் இல்லை 13 ஆண்டுகள் சம்பாதித்தது முழுமையும் கணக்கு கொடுக்கிறேன். இதன் விவரங்களை தனி வலைதளத்தில் முழுமையாக வெளியிடுகிறேன். அதே பிரஸ் மீட்டில் திமுக பினாமி அமைச்சர்கள் சொத்து கணக்கையும் வெளியிடுகிறேன். 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ளனர்" என கூறினார்.

சேகர் பாபு
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். சென்னை பாடியில் உள்ள கைலாசநாதர் மற்றும் திருவாலீஸ்வரர் திருக்கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார்.

மடியில் கனமில்லை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். தற்போது வெளிப்படையான உலகம். இதில் எதையுமே மறைத்து வாழ முடியாது. எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. தமிழக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

திராவிட மாடல்
எந்த நிலையிலும் எதையும் எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகவே உள்ளது. தமிழக முதலமைச்சரை பொறுத்த அளவில் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்ச லாவண்யத்திற்கு அப்பாற்பட்டு மக்கள் நலன் காக்கின்ற ஆட்சியாக நல்லதொரு ஆட்சியாக நடத்தி வருகிறார். இது போன்ற இடையூறுகள் தடைகள் எல்லாம் வருவது சகஜம். அதனை படிக்கட்டுகளாக மாற்றி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் ஆக்க வேண்டும் என முதல்வர் உறுதியோடு செயல்பட்டு வருகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications