தாண்டமுத்துவுக்கு புதிய ஆட்டோ வாங்கி கொடுத்த மு.க.ஸ்டாலின்... நெகிழ்ச்சி பின்னணி...!
சென்னை: சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்துவுக்கு புதிய ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தாண்டமுத்து என்பவர் சென்னை அயனாவரத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது ஆட்டோவுக்கு எப்.சி. வாங்குவதற்காக அதை பழுதுநீக்கி அண்ணா நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு நடந்ததோ பரிதாபம். பேப்பர் சரியில்லை அப்படி இப்படி என பல முறை அலைக்கழிக்கப்பட்டார் தாண்டமுத்து.
இதனால் விரக்தியடைந்த தாண்டமுத்து அண்ணா நகர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பே தனது ஆட்டோவை தீயிட்டு கொளுத்தி அதிகாரிகளுக்கு தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வை செய்தித் தொலைக்காட்சியில் பார்த்த உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் தாண்டமுத்துவை அழைத்துப் பேசி நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.
கடமை உணர்வின் அடையாளம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி... மு.க.ஸ்டாலின் பாராட்டுக் கடிதம்
மேலும்,புதிய ஆட்டோ வாங்கிக்கொடுக்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார். அதன்படி இன்று புதிய ஆட்டோ தாண்டமுத்துவிடம் திமுக சார்பில் ஒப்படைக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓட்டுநர் தாண்டமுத்துவிடம் புதிய ஆட்டோவுக்கான சாவியை வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் மு.க.ஸ்டாலின். கண்களில் கண்ணீர் கசிய சாவியை பெற்றுக்கொண்ட தாண்டமுத்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் ஏழ்மையான நிலையறிந்து அவருக்கு ஏற்பட்ட இன்னலை தீர்க்கும் பொருட்டு ஸ்டாலின் உதவியமைக்காக சென்னை மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.