செந்தில் பாலாஜியை விடாது விரட்டும் மோசடி வழக்கு.. ஜூலை 6ல் ஆஜராக சம்மன்.. மத்திய குற்றப்பிரிவு உத்தவு
சென்னை: அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக எழுந்த குற்றச்சாட்டின் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 6ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. 2015ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து ரூ 90 லட்சத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரூ. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி மந்தைவெளி வீட்டுக்கு சீல் வைத்தனர். பல ஆண்டுகாலமாக இந்த வழக்கு காலை சுற்றிய பாம்பாக செந்தில் பாலாஜியை சுற்றி வருகிறது.
செந்தில் பாலாஜி தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அமலாக்கத்துறையினர் கடந்த 13ஆம் தேதியன்று அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இரவு வரை விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். நெஞ்சுவலி ஏற்படவே அவருக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். பைபாஸ் ஆபரேசன் செய்துள்ள செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜியை ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேர்முகத் தேர்வு நடத்திய அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அப்போது பணியமர்த்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் என 80க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் தலைமறைவாக உள்ளதால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மத்திய குற்றப்பிரிவு போலீசார், வரும் ஜூலை 6ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு அலுவலகத்தில், உரிய ஆவணத்துடன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications