தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை..பதற்றம் அடைய வேண்டாம்.. மா.சுப்ரமணியன் தகவல்
குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய ஒரு ஆய்வகம் சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய ஒரு ஆய்வகம் சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்புக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 30 நாடுகளில் குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 550 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், எந்த குரங்கு அம்மை பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

கேரளாவில் குரங்கு அம்மை
அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 63 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் ஆய்வு மையம்
பயணிகளுக்கு முகம், கைகளில் கொப்பளம் வந்தால் தெர்மல் ஸ்கேன் கேமரா மூலம் கண்காணிக்கிறோம். குரங்கு அம்மை நோய் கண்டறியும் ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய ஒரு ஆய்வகம் சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

முதல்வர் ஸ்டாலின் நலம்
மக்கள் பெரிய அளவில் பதற்றம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஐசிஎம்ஆர் மூலம் 15 நாட்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியும் ஆய்வு மையம் அமைக்கப்படும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தல்படியே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வில் இருக்கிறார் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.












Click it and Unblock the Notifications