கரூர் பிரச்சாரத்தில் இறந்த பெண்ணின் குழந்தையை! பணத்துக்காக தூக்கிச் சென்ற தந்தை! பாட்டி கண்ணீர்
கரூர்: கரூர் விஜய் பிரச்சாரத்தில் உயிரிழந்த பெண்ணின் குழந்தையை பணத்துக்காக அவரது தந்தை தூக்கிச் சென்றுவிட்டதாக அந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. அது போல் மத்திய அரசு தலா ரூ 2 லட்சத்தை அறிவித்தது.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் தங்களால் முயன்ற தொகையை அவர்களின் குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 20 லட்சம் கொடுப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு அவர் பணத்தை வரவு வைத்துவிட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு உள்ளிட்டவற்றை தானே ஏற்பதாக தெரிவித்திருந்தார்.
அண்மையில் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய், மாமல்லபுரத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் தங்களை சந்திக்க நேரில் வரவில்லை என்ற காரணத்தை கூறி, விஜய் அனுப்பிய ரூ 20 லட்சம் பணத்தை பெண் ஒருவர் திருப்பி அளித்துவிட்டார். அவரது கணவர்தான் விஜய் மாநாட்டிற்கு சென்று இறந்துவிட்டாராம்.
இந்த நிலையில் விஜய் மாநாட்டிற்கு சென்று பிருந்தா என்ற பெண்ணும் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கிறதாம். பிருந்தாவுக்கும் அவரது கணவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வருகிறதாம்.
இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இரு ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் பிருந்தா, தனது குழந்தையுடன் தாய் சுதா வீட்டில்தான் வசித்து வந்தாராம். இந்த நிலையில் இறந்த பிருந்தாவின் முகத்தை கூட பார்க்க வராத அவருடைய கணவர், விஜய் நிவாரணம் அறிவித்ததும், "எனது மனைவி" என சொந்தம் கொண்டாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிருந்தாவின் உடலை கேட்டு பிரச்சனை செய்தாராம். உடலையும் தான்தான் கணவர் என கூறி கேட்டு வாங்கி அந்த உடலுக்கு இறுதி சடங்குகளையும் செய்தாராம்.
மேலும் பணத்தை தனது குழந்தையின் பெயரில்தான் போடுவார்கள் என்பதை அறிந்த அவர், குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டாராம். அந்த ரூ 20 லட்சம் பணத்தை தனது அக்கவுன்ட்டில் போட்டு கொண்டாராம். குழந்தையை தங்களிடம் கொடு என சுதா கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. பிருந்தா இறந்ததால் கிடைத்த பணத்தை குழந்தையின பெயரில் போட்டு பிருந்தாவின் அம்மாவையும் அவரது கணவர் வீட்டில் ஒருவரையும் நாமினியாக போடுமாறு கேட்டதற்கு போட முடியாது என மறுக்கிறாராம்.
இது தொடர்பாக சுதா உள்ளிட்டோர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனராம். இந்த மனுவை விசாரிக்குமாறு கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. பிருந்தாவின் கணவரிடம் அவர்கள் பேசி நாமினி விவகாரத்தை செய்யுமாறு கூறியதற்கு மறுத்துவிட்டாராம். இதனால் எஸ்.பி. அலுவலகத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் சென்று மீண்டும் புகார் அளிக்குமாறு தெரிவித்தனராம். அதனால் பிருந்தாவின் தாய் சுதா உள்ளிட்டோர் கரூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் இந்த விவரங்களையும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications