பெண்களை போல் திருநங்கையர்களையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்.. எம்பி ரவிக்குமார் கோரிக்கை
சென்னை: பெண்களை போல் திருநங்கையர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதோடு பெண்களையும், திருநங்கையரையும் அர்ச்சகர்களாக நியமிக்கவும்; மாநில மாவட்ட ஆலோசனைக் குழுக்களில் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் பெண்களை உறுப்பினர்களாக நியமிக்கவும் ஏதுவாக சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்திலும் பின்வரும் கோரிக்கைகளை தங்கள் மேலான பரிசீலனைக்கு முன்வைக்கிறேன்.
ஆகம விதிகள்
2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாகக் காத்திருப்போரை உடனடியாக நியமிக்கவேண்டும்.
பயிற்சி பள்ளி
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தமிழ்நாடு அரசு துவக்கவேண்டும். அதில் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படவேண்டும். மாநில , மாவட்ட ஆலோசனைக் குழுக்களில் பெண் ஒருவரை நியமிக்க ஏதுவாக 'இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 7 மற்றும் 7 A ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும்.
திருத்தம்
இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 49 கோயில் அறங்காவலர்களில் ஒருவர் எஸ்சி/எஸ்டி ஆக இருக்கவேண்டும் எனக் கூறுகிறது. அதுபோலவே மாநில, மாவட்ட ஆலோசனைக் குழுக்களிலும் நியமிக்க அந்த சட்டத்தின் பிரிவுகள் 7 மற்றும் 7 A ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்யப்படவேண்டும்.
அதிகாரம்
கோயில் பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலருக்கு வழங்கும் 'இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959 இன் பிரிவு 55 இல் ஆண் / பெண் என்ற பாலின பாகுபாடு ஏதுமில்லை. எனவே பெண் ஒருவரை அர்ச்சகராக நியமிக்க சட்டப்படி தடை ஏதுமில்லை.
விளக்கம்
எனினும் பணியாளர் என்பதற்கு அந்தப் பிரிவில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் The expression "office-holders or servants" shall include archakas and pujaries of all gender என்று திருத்தம் செய்து மகளிர் மட்டுமின்றி திருநங்கையரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வழிசெய்ய வேண்டும்.
கோயில்கள்
இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கோயில்களில் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட வேண்டும் என சமத்துவப் பெரியார், கருணாநிதி அவர்களின் கனவை நனவாக்கி அவரது நெஞ்சில் வைத்த முள்ளை அகற்றிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என அக்கடிதத்தில் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.