ஷாக்.. 2022ல் சென்னையில் அதிகரித்த கொலைகள்.. 2020, 2021யை விட மோசம்.. ஆனாலும் ஆறுதல்.. எப்படி?
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 2020, 2021ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 2022ல் அதிக கொலைகள் நடந்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2020 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் தொடர்ந்து சென்னையில் கொலை வழக்குகள் உயர்ந்து வருவது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் கூட சென்னையில் ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது ஆறுதலான விஷயமாக உள்ளது. 2022ல் சென்னையில் நடந்த குற்ற சம்பங்கள் பற்றிய முழுவிபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை உள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் என எடுத்து கொண்டால் டாப் 10ல் சென்னைக்கும் இடமிருக்கும்.
சமீபத்தில் கூட பெண்களின் பாதுகாப்பாக பணிபுரிய சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவதார் குழுமம் நடத்திய இந்த ஆய்வில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்தது.

சென்னையில் அதிகரித்த கொலை
இந்நிலையில் தான் தற்போது சென்னையை பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் கொலைகளின் எண்ணிக்கை என்பது ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் சென்னையில் மொத்தம் 97 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய 2021 மற்றும் 2020ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். கடந்த 2020ல் சென்னையில் மொத்தம் 93 கொலைகள் நடந்த நிலையில் இது 2021ல் 94 அதிகரித்தது. இந்நிலையில் தான் தற்போது 97 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்விரோத கொலைகள் சரிவு
இருப்பினும் கூட ஆதாயத்துக்காக நடக்கும் கொலை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதாயத்துக்காக கடந்த 2021ல் 10 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இது 2022ல் 4 என்ற அளவில் குறைந்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் முன்விரோத கொலைகளும் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2021ல் முன்விரோதம் காரணமாக 36 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இது 2022ல் 20 ஆக சரிந்துள்ளது. குற்ற பின்னணி கொண்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இத்தகைய கொலை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை, வழிப்பறி குறைவு
மேலும் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது கொள்ளை சம்பவங்கள் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 2020ல் 17 கொள்ளை வழக்குகள் பதிவான நிலையில் இது 2021ல் 15 ஆகவும், 2022ல் 11 ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல் வழிப்பறிகளும் சரிந்துள்ளது. 2020ல் 470 வழிப்பறி சம்பவங்களும், 2021ல் 253 வழிப்பறி சம்பவங்களும், 2022ல் 230 வழிப்பறி சம்பவங்களும் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் வழிப்பறி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 5,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

426 பேர் குண்டர் சட்டத்தில் கைது
இதுதவிர வடசென்னையை விட தென்சென்னையில் தான் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 426 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. இருப்பினும் கூட சென்னையில் கொலைகள் மட்டும் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகரித்துள்ள நியைில் ஒட்டுமொத்த குற்றங்கள் என்பது சென்னையில் 2022ம் ஆண்டில் குறைந்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications