தேவயானி கேட்ட ஒரே கேள்வி.. கப் சிப் ஆன நடிகர் சங்கம்! விஜயகாந்த் நினைவேந்தல்!
சென்னை: நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி உணர்ச்சிப்பூர்வமாக நடந்து முடிந்திருக்கிறது.
விஜயகாந்த் மறையையொட்டி நடிகர் சங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், சிவகுமார், ராதாரவி, ரேகா, அம்பிகா, சிம்ரன், தேவயானி, சரண்யா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன்:
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "தமிழ்நாட்டில் பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் மறைந்தபோது வந்த கூட்டத்தை விஜயகாந்த் மறைவுக்கும் வந்ததை நான் பார்த்தேன். அவர் சேர்த்த சொத்து அதுதான்.
அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது விஜயகாந்திடம் இருந்த நியாயமான கோப உணர்ச்சி எனக்குப் பிடிக்கும் நான் சொல்லி இருந்தேன். நியாயமான விசயத்தைச் சொல்ல, நாக்கைக் கடித்துக் கொண்டு சொல்ல வேண்டிய இடத்தில் அவர் தைரியமாகச் சொல்லிவிடுவார்.
அதற்காகத் தயங்கமாட்டார் என்று. அந்தத் துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கே உதவியாக இருந்திருக்கிறது. அவர் போல் இல்லை எனச் சொல்வது வழக்கம். அவர் போல் இருக்க வேண்டும் என்று முயற்சியாவது செய்வோம்" என்று தாழ்வான குரலில் தன் இரங்கலைப் பதியவைத்தார்.

சரத்குமார்:
1990 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக விஜயகாந்த்தை நான் சந்தித்தேன். அந்த ஆண்டில் மிகப் பெரிய சரிவை நான் சந்தித்திருந்தேன். அப்போது என்னை விஜயகாந்திடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது 'புலன் விசாரணை' படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் படத்தின் இயக்குநர் செல்வமணி தான். ராவுத்தர் இருந்தார். அப்போது ஒரு புதிய வில்லனை தேடிக் கொண்டிருந்தார்கள். நான் போய் விஜயகாந்தைப் பார்த்தேன். அவர் இயக்குநரையும் பார்த்துவிடுங்கள் என்றார்.

அப்போது என்னைப் பார்த்துவிட்டு, செல்வமணியும் ராவுத்தரும் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். 'இவர் மீசையை எடுத்தால் எப்படி? இருக்கும்' என அவர்கள் பேசியது என் காதில் விழுந்தது.
உடனே வெளியே சென்று ரோகிணி லாட்ஜுக்குச் சென்று மீசை எடுத்துவிட்டு இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்து, 'இப்படித்தான் இருக்கும்' என்று அவர்களிடம் காட்டினேன். அன்று மீசை எடுத்த நாளில் சந்தித்தேன். இன்று அவருக்காக மீசையை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. அதை நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை வட்டம் நினைவுக்கு வருகிறது.

அன்று ஒரு அறிமுகம், சந்திக்கின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இன்று அதே முகத்தோடு வந்து பார்த்தபோது மறைந்துபோன விஜயகாந்தின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
நான் அவர் மறைந்த நாளில் வெளிநாட்டிலிருந்தேன். உடனே வர முடியாத தூரம். வந்த பிறகு அவரது சமாதியில் அஞ்சலிதான் செலுத்த முடிந்தது. ஆனால், அவருக்காக நடந்த அமைதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் உள்ளது.
நான் 'புலன் விசாரணை' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் க்ளைமேக்ஸ் காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது. நான் விஜயகாந்தைப் போட்டு அடி அடி என்று அடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு வில்லன் கதாநாயகனை இந்தளவுக்குப் போட்டு அடிக்கும்படி காட்சி தேவையா? என்று கேட்டேன். உடனே விஜயகாந்த் என்னைக் கூப்பிட்டார். 'சரத் சொல்வதைச் செய்யுங்கள். கரெக்ட் ஆக இருக்கும்' என்றார்.

நான் அந்தளவுக்குப் போட்டு அவரை அடித்த பிறகுதான் அவர் என்னைத் திரும்பத் தாக்கும்போது அந்தக் காட்சி சிறப்பாக அமையும் என்று சொன்னவர் விஜயகாந்த். வேறு நடிகராக இருந்தால், நாயகனை இப்படி அடிக்கும் காட்சிக்குச் சம்மதம் சொல்ல மாட்டார்கள். அதுதான் விஜயகாந்த்.
எனக்கு அடிப்பட்டதால், மூன்று நாள் ஓய்வு எடுக்கச் சொன்னார் விஜயகாந்த். ஆனால், நான் உடனே போய் ஒரு ஊசி போட்டுக் கொண்டு வந்து நடித்தேன். அதற்காக என்னைக் கடிந்து கொண்டார். உடல் நலன் முக்கியம் என்றார்.
2000 முதல் அவருடன் நடிகர் சங்கத்தில் சேர்ந்து உடன் பயணித்திருக்கிறேன். அவரது நிர்வாகத் திறன் சிறப்பானது.

தேவயானி
விஜயகாந்த் தலைவராக இருக்கும்போதுதான் நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினரானேன். அவரே போன் செய்து, 'நீங்கள் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்' என்று சொன்னார். எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது. அவர் தலைவராக இருந்தபோதுதான் மதுரையில் கார்கில் போருக்காக நிதி திரட்ட கலைநிகழ்ச்சி நடத்தினோம். அவர் தலைவராக இருந்ததால்தான் அது அன்று நடந்தது.
அதன்பிறகு சிங்கப்பூரில் ஒரு கலைவிழா நடத்தினார். அதுவும் அவரால் தான் முடிந்தது. அதன்பிறகு அப்படி ஒரு நிகழ்ச்சியை நடிகர் சங்கத்தால் நடத்த முடிந்ததா?

அவரது சொந்த கம்பெனியில் 2 படங்களை நான் நடித்திருக்கிறேன். எங்களுக்கு முன்னால் ஷுட்டிங் ஸ்பாட்டில் யார் மேக் அப் உடன் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் முதல் ஆளாக விஜயகாந்த்தான் இருப்பார்.

வாகை சந்திரசேகர்
நானும் விஜயகாந்தும் 1978களில் சேர்ந்து பழக ஆரம்பித்தோம். அந்தக் காலத்தில் போராட்டம், துக்கம், பசி, பட்டினி அனைத்தையும் நாங்கள் இருவர் மட்டுமே பகிர்ந்துகொண்டோம். அந்தக் காலத்தில்தான் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், தியாகி போன்றவர்கள் எங்களுக்கு நண்பர்களானார்கள்.
நானும் விஜியும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வோம். எங்கள் சண்டையைச் சமாதானம் செய்பவராக இருந்தவர் ராதாரவி. சண்டையை இன்னும் மூட்டி விடுபவர் யார் என்றால் எஸ்.எஸ்.சந்திரன். இதற்கு நடுவில் காமெடி செய்து எங்களைச் சேர்த்து வைப்பான் தியாகு.
அந்தக் காலகட்டத்தில் கமல், ரஜினி என்ற இரண்டு ஜாம்பவான்கள் தமிழ்த் திரையைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். அப்படியான காலத்தில் உள்ளே புகுந்து கலக்கினார் விஜயகாந்த்.

அதைப்போல அரசியலில் ஒரு பக்கம் கருணாநிதி, இன்னொரு பக்கம் ஜெயலலிதா எனக் கொடிகட்டிப் பறந்தார்கள். அதற்குள்ளாகவும் புகுந்து விஜயகாந்த் கலக்கினார்.
இந்தக் கூட்டத்தில் இறுதியாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் பேசினார். அவர் மேடை ஏறி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அவரது தந்தையின் பெயரை உச்சரித்தார். அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அதன்பின்னர் நிலைமையைச் சமாளித்துக்கொண்டு, "இந்த ஆண்டு புத்தாண்டு அன்று எங்கள் அப்பாவுக்கு ஒரு உறுதி மொழி செய்து கொடுத்தேன். அது என்ன என்று இங்கே சொல்லப் போவதில்லை. அதை நிறைவேற்றிவிட்டு, பிறகு சொல்வேன். அதுதான் நான் அவருக்குச் செய்யும் மரியாதை" என்றார்.
அரங்கமே கண்ணீர் வடித்தது.












Click it and Unblock the Notifications