தொகுதி பங்கீட்டில் ஆதிக்கம் செலுத்திய "தேசியம்".. திராவிடத்திடம் பணிந்தது எப்படி!
சென்னை : தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. த்ரில்லர் படங்களை மிஞ்சும் அளவிற்கு அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகின்றன.
அந்த முறை அதிகமான கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதால் யாருக்கு ஓட்டு போடுவது என மக்கள் குழும்ப போகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அரசியல் கட்சிகள் தான் அதீத குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
குழப்பத்தில் அரசியல் கட்சிகள்
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு எல்லாம் ஒரு வழியாக முடிய போகிறது. இனி எந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற விபரம் வெளியாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இதனால் அதிமுக மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் உள்ளன. மறுபடியும் முதலில் இருந்து கூட்டணி பேச்சை துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலை தான் உள்ளது.
ஆதிக்கம் செலுத்திய தேசிய கட்சிகள்
கூட்டணிக்கு திராவிட கட்சிகள் தலைமை வகித்தாலும், தொகுதி பங்கீட்டில் தேசிய கட்சிகளின் நிலை தான் ஓங்கி இருந்துள்ளது. அதிமுக, திமுக.,விற்கு அழுத்தம் கொடுத்து அதிக இடங்களை பெற்றுள்ளன. தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிக தொகுதிகளை ஒதுக்கும்படி இப்போதும் அதிமுக தலைமையிடம் பாஜக கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாஜக.,வுக்கு அதிக இடங்கள்
இதுவரை ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜக.,விற்கு அதிமுக தலைமை எப்படி 20 இடங்களை ஒதுக்கியது என்பது புரியாத புதிராக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக.,வின் வாக்குவங்கி மிக மிக குறைவு என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த தேர்தலில் நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களையே பாஜக, தமிழகத்தில் பெற்றது. இதை எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கிண்டல் செய்தும் பேட்டி அளித்திருந்தனர்.
பணிய வைத்தது எப்படி
திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் பாஜக.,வும் அதிக இடங்களை கொடுத்தே தீர வேண்டும் என கடைசி வரை பிடிவாதமாக இருந்தன. கடைசியாக கன்னியாகுமரி லோக்சபா தொகுதியை ஒதுக்க அதிமுக, திமுக சம்மதித்ததால் தான் கூட்டணி பேச்சு முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு கன்னியாகுமரி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிக்கு வேட்பாளராக அந்த மாவட்டத்தில் செல்வாக்கான மனிதரான பொன்.ராதாகிருஷ்ணனை வேட்பாளராகவும் பாஜக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரிக்கு கடும் போட்டி
பாஜக - காங்கிரஸ் இடையே கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. பாஜக.,வை பொறுத்த வரை, தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. ஒரே ஒரு எம்.பி., தான் 2014 தேர்தலில் கிடைத்தது. அதுவும் பொன்னாரால் மட்டுமே முடிந்தது. 2019 ல் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாஜக.,வுக்கு செல்வாக்கு உள்ள இடம் என்றால் அது கன்னியாகுமரி மட்டும் என்பதால் அதற்காக போராடுகிறது. அதிக மீனவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ள தொகுதி என்பதால் கன்னியாகுமரி தொகுதியை பெற காங்கிரசும் போராடி உள்ளது.