மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை.. ஐஐடி இயக்குநருக்கு நோட்டீஸ்.. பேராசிரியர்கள் முன் ஜாமீன் மனு
சென்னை: மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பேராசிரியர்கள் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஐஐடியின் இயக்குநருக்கும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பட்டியலின மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதனால் 8 பேரை கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்கு வங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து கைது செய்தனர்.
இவர் ஏற்கெனவே முன் ஜாமீன் பெற்றிருந்ததால் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ஐஐடி இயக்குநருக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஜி எட்மன் பிரசாத், ரமேஷ் எல் கர்தாசின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications