விக்னேஷ் லாக் அப் மரணம்... 5 காவலர்களை உடனே சஸ்பென்ட் பண்ணுங்க - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
சென்னை: விசாரணைக் கைதி விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக 5 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் இரவு 11.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர்.

குறைந்த நாடித்துடிப்பு
இருவரிடம் 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்து வழக்குப்பதிந்த போலீசார், விக்னேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு நாடித்துடிப்பு குறைவாக இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

விக்னேஷ் மரணம்
இதனை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ், செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆம் தேதி விக்னேஷின் சடலம் அவரது சகோதரிடம் ஒப்படைக்கப்பட்டு ஐஸ் அவுஸ் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

உருட்டுக்கட்டை
இதனிடையே போலீசார் விசாரணையின்போது விக்னேஷை கடுமையாக உருட்டுக் கட்டை கொண்டு தாக்கியதால் ரத்த காயங்கள் ஏற்பட்ட பின்னரே அவரை காவல் நிலையம் கொண்டு சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பிலோ வலிப்பு, வாந்து ஏற்பட்டு விக்னேஷ் கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த வழக்கை காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். பிரேத பரிசோதனை அறிக்கை, துறை விசாரணை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும் விக்னேஷை காவலர்கள் துரத்து பிடித்து அடித்து அழைத்து செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரேத பரிசோதனை அறிக்கை
விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. லத்தியால் தாக்கப்பட்டதற்கான காயங்களும், உடலில் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தம் கட்டியதற்கான காயங்களும், தலை, கண், இடது கை, முதுகின் வலது பக்கம், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

6 காவலர்கள் கைது
இந்த வழக்கில் காவல் நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ், தலைமைக் காவலர் குமார், ஊர்காவல்படை வீரர் தீபக் மற்றும் 2 ஆயுதப்படை காவலர்களை ஆகிய 6 பேரை சிபிசிஐடி கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 20 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications