நீட் தேவையில்லை.. உறுதியாக இருக்கிறோம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு அளித்த பாமக
சென்னை: தமிழ்நாட்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் தேர்வு கூடாதென்பதில் பா.ம.க உறுதியாக உள்ளதாக அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வு விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்தன. இந்தக்கூட்டத்தில் அனைத்துக் கட்சியில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பா.ம.க சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார்.
மேலும் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த நிலைப்பாட்டை இயற்றுவதற்கு இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

அனைத்து கட்சி கூட்டம்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி , அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் தரப்பில்
செல்வபெருந்தகை, விசிக சிந்தனைச் செல்வன், பிஜேபி சார்பாக வானதி சீனிவாசன், பாமக சார்பாக அதன் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட 13 பேர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு
கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்தன. அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் 13 கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தன. பா.ஜக. மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. கூட்டத்தில் அடுத்தகட்டமாக நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.கே.மணி
அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, '' முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சிக்கூடத்தில் பா.ம.க சார்பில் பங்கேற்று சரியான கருத்துக்களை வலியுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் தேர்வு கூடாதென்பதில் பா.ம.க உறுதியாக உள்ளது.
Recommended Video

நீட் தேவையில்லை
முதன்முதலில் தமிழகத்தின் நுழைவுத்தேர்வு வந்தபொழுது நுழைவுத்தேர்வு கூடாது என்று எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு முடிவில் ஒரு பொது தேர்வும் பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு அரசு பொது தேர்வும் நடைபெறுகிறது ,அரசு பொது தேர்வே போதுமானது மீண்டும் ஒரு தகுதி தேர்வு தேவையில்லை. ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது நீட் தேர்வு என்ற நுழையா தேர்வு கண்டிப்பாக கூடாது மேலும் மருத்துவக்கல்வி மட்டுமல்லாமல் எந்தவித உயர் கல்விக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை. தமிழக மக்கள் நலன் கருதி மத்திய அரசு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்'' என்று ஜி.கே.மணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications