அப்பாயின்ட்மென்ட் தராத அமித்ஷா?.. "நீட் தேர்வு".. மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துகட்சி கூட்டம்
நாளை காலை நடக்கிறது அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. நீட் தேர்வுக்கு திமுக உட்பட அனைத்து கட்சிகளுமே தங்கள் எதிர்ப்வை காட்டி வருகின்றன.
இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.. ஆனால் இப்போது வரை மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவே இல்லை.

அமித்ஷா
இந்த விவகாரம் குறித்து நேற்றும் சட்டப்பேரவையில் முதல்வர் பேசினார்.. அப்போது, "இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட்தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க, அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை.

நடவடிக்கைகள்
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்" என்று அறிவித்திருந்தார்.

கடிதம்
அதன்படியே, தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். இதுகுறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
அதன்படி நாளை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டமுன்வரைவு மீது ஆளுநர் இதுவரை முடிவெடுக்காத நிலையில், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, இந்த அனைத்து கட்டசி கூட்டத்தில் கூடி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications