மதுரையில் கோளரங்கம்...கோளாறான கேள்வி கேட்காதீங்க - சபாநாயகர் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகள் எல்லாம் கேட்கிறீங்க, உக்காருங்க என்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சென்னை: கோளரங்கம் பற்றிய கேள்வி எழுப்பும் போது அதற்கு துணை கேள்வியாக கோளாறான கேள்விகளை கேட்காதீர்கள் என்று சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் சொன்னது உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் புதிய கோளரங்கம் அமைக்க திட்டமிட்டால் மதுரையில் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை மற்றும் மதுரை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தங்கள் தொகுதிகளுக்கு கோளரங்கம் வேண்டும் என கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்துப் பேசினார். இந்நிலையில், சட்டசபை உறுப்பினர் கோவிந்தசாமி மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என கேட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, ஏங்க கேள்வி கோளரங்கம், துணை கேள்வி கேட்டால் விவரமா கேட்க வேண்டாமா என கேட்டார்.

சபாநாயகர் அப்பாவு
அடுத்ததாக சட்டசபை உறுப்பினர் ரவி, அரக்கோணம் அரசு கல்லூரி வகுப்பறை பற்றாகுறை என கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, கோவிந்தசாமிக்கு சொன்னது தான், கேள்வி கோளரங்கம்; கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகள் எல்லாம் கேட்கிறீங்க, உக்காருங்க என தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

பொன்முடி பதில்
இந்நிலையில், கந்தர்வகோட்டையில் கோளரங்கம் அமைப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் மொத்தம் 4 கோளரங்கம் உள்ளன. அவை திருச்சி, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னையில் உள்ளன. உங்கள் தொகுதி பக்கத்திலேயே திருச்சியில் ஒன்று உள்ளது அதை திறந்து வைத்தவர் கருணாநிதிதான். திருச்சியில் உள்ள மையத்தை விரிவுபடுத்தி, மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன.

கோளரங்கம் அமைக்க செலவு
ஒரு மையம் உருவாக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் வேண்டும். செலவு 15.20 கோடி, பணியாளர் மற்றும் பராமரிப்புச் செலவுக்கு தொடர் செலவாக 65 கோடி ஆகும். என் மாவட்டம் விழுப்புரத்தில் கூட தொடங்க வேண்டும் என ஆசை தான். ஆனால் வரும் காலங்களில் தமிழ்நாட்டின் நிதி நிலைக்கு ஏற்ப முடிவுகள், முதல்வர் ஆலோசனைப்படி எடுக்கப்படும் என்று கூறினார்.

மதுரையில் கோளரங்கம்
அப்போது பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா "மதுரையில் ஒரு கோளரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பூர்வாங்க செயல்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு கோளரங்கம் கூட இல்லை. எனவே மதுரையில் ஒரு கோளரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர், புதிய கோளரங்கம் அமைக்க முடிவு செய்தால் மதுரையில் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications