வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தம்..புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் சொன்னது இதுதான்!
சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 8,9ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து பகுதியில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. கீழ் கோத்தகிரி எஸ்டேட், சிவகிரி, மாஞ்சோலை பகுதியில் தலா 6 பர்லியார் , கீழ் கோதையாறு , அடையாமடை , நாலுமுக்கு , கருப்பாநதி அணை பகுதியில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
லா நினா..வெகுவாக குறைந்த வடகிழக்கு பருவமழை..குளிருக்கு காரணம் கூறிய பாலச்சந்திரன்
கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
நவம்பர் 30, டிசம்பர் 1 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 நாட்களுக்கு மிதமான மழை
டிசம்பர் 2,3ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4ஆம் தேதியன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் லேசான மழை
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
புயலாக மாற வாய்ப்பு
அந்தமான் கடல் பகுதிகளில் 5ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 8,9ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.