தமிழகத்தை மிரட்டும் மாண்டஸ் புயல்.. 3 நாட்கள் வெளுக்கபோகும் கனமழை.. வெளியான புது அப்டேட்!
சென்னை: புதிதாக உருவாக உள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை முதல் 3 நாட்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தான் புதிதாக புயல் உருவாகலாம் என சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியிருந்தது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கையும் விடுத்து இருந்தது.
தொடரும் மழை..சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை..நாளை அனுமதி கிடைக்குமா?
மாண்டஸ் புயல்
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய தகவலில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
நாளை, டிசம்பர் 8 ல் கனமழை
இந்த வானிலை மாறுபாடு காரணம் இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யலாம். மேலும் நாளை டிசம்பர் 7 ல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் எப்படி?
நாளை மறுநாளான டிசம்பர் 8 ல் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதவிர ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
டிசம்பர் 9 ல் மழை நிலவரம்
அதன்பிறகு டிசம்பர் 9 ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.