"பரபரப்பாகும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. அதிமுகவை அச்சுறுத்த முடியாது" ஜெயக்குமார் சீற்றம்!
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மூலம் அதிமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கோடநாடு வழக்கில் அவர் சிறை செல்வார் என்று பேசி வருகின்றனர். இதேபோல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்த போது, கோடநாடு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
கோடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் அளவிற்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் - ஒழுங்கை பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. கோடநாடு கொலை, கொள்ளை பற்றி ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அவரின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும்.

விரைவில் தண்டனை
கோடநாடு வீடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு. அங்கு வெறும் கொள்ளை நடைபெற்றிருந்தால் கூட சாதாரண வழக்காக பார்க்கலாம். ஆனால் பல்வேறு கொலைகள் நடைபெற்றுள்ளது. அதனால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிச்சயம் தவறு செய்தவர்கள், சிறை செல்வார்கள் என்று தெரிவித்தார். இதனால் கோடநாடு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியது.

ஜெயக்குமார் பேட்டி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அரசியலில் நாகரீகம் என்பது மிகமுக்கியம். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அநாகரீகமாக விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி படிக்கும் போது புல்லட் வாகனம் வைத்திருந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து, உழைப்பின் மூலம் அதிமுக மீதான பற்றின் காரணமாக உயர் பதவிகளுக்கு வந்தவர். ஆர்.எஸ்.பாரதி வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.

கோடநாடு வழக்கு
அதிமுக ஆட்சியில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக தான். கோடநாடு வழக்கின் மூலம் அதிமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அனைத்துவிதமான விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் மீது விமர்சனம்
"எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் பயமில்லை" அதனால் தான் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கிறோம். அதிமுகவினர் மீதான வழக்கை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். ஓபிஎஸ் தரப்பினர் திமுகவோடு கைகோர்த்து செயல்படுகின்றனர். 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது திமுகவினர் பதில் அளிக்க வேண்டும். அப்போது ஊழல் செய்தவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் நிச்சயம் சிறை செல்வார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications