இன்று தூள் கிளப்ப போகும் சென்னை-கோவை வந்தே பாரத்! சென்ட்ரலில் பல்வேறு கட்டுப்பாடுகள்.. முழு விவரம்
சென்னை: பிரதமர் மோடி சனிக்கிழமை சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அப்போது சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தமிழகம் வருகிறார். ஆந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
குறிப்பாகப் பலரும் எதிர்பார்க்கும் சென்னை கோவை ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார். வந்தே பாரத் என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாகும். ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டது.

வந்தே பாரத்: இப்போது நாடு முழுக்க 11 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சில மாதங்களில் இப்படி நாடு முழுக்க 400 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே இலக்காகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயிலாகச் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதுவரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் 16 பேட்டிகள் இருந்த நிலையில், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் 8 பேட்டிகள் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை கோவை வந்தே பாரத் சோதனை ஓட்டம் நடந்த நிலையில், அது திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் 22 நிமிடங்கள் முன்னதாகவே கோவை வந்தடைந்தது.

பிரதமர் மோடி: இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைக்கிறார். அந்த வந்தே பாரத் ரயில் ஏற்கனவே சென்னை சென்டரல் வந்தடைந்துவிட்டது. அது இப்போது 10ஆவது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நிகழ்ச்சி இருப்பதால் பயணிகள் முன்கூட்டியே வரும்படியும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வந்தே பாரத் இருக்கும் 10ஆம் பிளாட்பாரம் அருகே தான் புறநகர் ரயில்கள் செல்லும் பாதை உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, அந்த தண்டவாளத்தில் காலி பெட்டிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இப்போது வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
பிளாட்பார்ம் டிக்கெட்: அதன்படி, சனிக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டுகள் (பிளாட்பார்ம் டிக்கெட்) வழங்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், பழைய Concourse (நடைமேடை 4, 5, 6) பகுதிக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் ரயில் பயணிகள், வாகனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அல்லிக்குளம் சாலை வழியாக வந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 முதல் 6 வரை போக்குவரத்தில் மாற்றம் அமலில் இருக்கும்
அதேநேரம் பிரதமர் நிகழ்ச்சிக்காக எந்தவொரு ரயிலும் ரத்து செய்யப்படவில்லை. அனைத்து ரயில்களும் வழக்கம் போலவே இயங்க உள்ளது. இருப்பினும், அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகள் முன்கூட்டியே வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications