தீபாவளிக்கு இறைச்சி கடைகள் திறப்பு விவகாரம்.. பாஜகவின் நாராயணன் திருப்பதி அரசுக்கு அதிரடி கேள்வி
சென்னை: மகாவீரர் நினைவு நாளன்று தீபாவளி திருநாள் என்பதால் இறைச்சி கடைகளை மூடும் வழக்கத்தை தவிர்த்து திறக்க சொல்கிற தமிழக அரசு, வள்ளலார் பிறந்த தினத்தன்று தீபாவளி வந்தால் அதே நிலைப்பாட்டை கொள்ளுமா? என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.
தீபாவளி திருநாள் இந்த ஆண்டு நவம்பர் 4ம்தேதி வருகிறது. மக்கள் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்கி, இனிப்புகளை வாங்கி, பட்டாசுகளை வாங்கி உற்சாக உற்சாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று மகாவீரர் நினைவு தினம் வருகிறது. அதையொட்டி நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், மகாவீரர் நினைவு நாளையொட்டி நவம்பர் 4ம்தேதி அன்ற ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இறைச்சி கடைகள்
தீபாவளி நாளில் இறைச்சிகள் அதிகம் விற்பனையாகும். அன்று தான் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இறைச்சி சமைப்பார்கள், கறி, மீன், சிக்கன் என்று ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளி பண்டிகை களைகட்டும். தீபாவளி திருநாள் அன்று இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது,

யாருக்கும் உரிமையில்லை
எந்த நாளின் பெயரை சொல்லியும் மக்களின் உணவு உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மக்களிடம் கொந்தளிப்பான மனநிலை உருவானது. இறைச்சி கடை எதற்காக அடைக்க வேண்டும்? ஒருவர் சாப்பிடவில்லை எனில் அவர் எப்படி அடுத்தவர் மீது அதை சாப்பிடாதே என திணிக்க முடியும்? என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் முன்வைத்தனர்.இறைச்சி கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலதரப்பினரும் தீபாவளி தினத்தன்று இறைச்சி கடைகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தினர்.

மக்களின் உணர்வுகள்
இதையடுத்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவில், இந்த ஆண்டு வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதேநாளில் மகாவீர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தி நாளன்று இறைச்சி கடைகள் மூடப்படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது . அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தளங்களைச் சுற்றியுள்ள இறைச்சி கடைகள் மூடப்படும்" என்று அறிவித்தது.

பட்டாசு கட்டுப்பாடுகள்
இதனை விமர்சித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "மகாவீரர் நினைவு நாளன்று தீபாவளி திருநாள் என்பதால் இறைச்சி கடைகளை மூடும் வழக்கத்தை தவிர்த்து திறக்க சொல்கிற தமிழக அரசு, வள்ளலார் பிறந்த தினத்தன்று தீபாவளி வந்தால் அதே நிலைப்பாட்டை கொள்ளுமா? பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் பேரில் திறக்க உத்தரவிடுவதாக சொல்லும் அரசு, பெரும்பான்மை மக்கள் நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க விரும்புகிறார்கள் என்பதால் பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை அகற்றி கொள்ளுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தவறான முன்னுதாரணம்
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்ட ட்வீட் பதிவில் சைவத்தைப் போல அசைவமும் ஒரு உணவுமுறை கோவில்களில் கிடாய்வெட்டிப் பொங்கல் வைக்கும் மரபு நம்முடையது. அப்படியிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சொல்வது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறியிருந்தார்.

ஊர்வலம்
இதற்கு பதில்அளித்த நாராயணன் திருப்பதி, அதே போல், விநாயக சதுர்த்தியன்று ஊர்வலம் செல்லும் மரபு நம்முடையது. அப்படியிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று சொல்வது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாதா? என்று கேள்வி எழுப்பினார்.

ஜோதிமணி பதில்
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகையில், லட்சக்கணக்கான மக்களோடு கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்,ஊரெங்கும் அம்மன் திருவிழாக்கள் நடக்கின்றன.அப்பொழுதெல்லாம் நடக்காத மதக்கலவரம் ஏன் பாஜக/ஆர்எஸ்எஸ் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் மட்டும் நடக்கிறது? கலவர அரசியலுக்கும்,உண்மையான கடவுள் நம்பிகையும் உள்ள வேறுபாடு இதுதான்! என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications